Wednesday 24 December 2014

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு


இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து கிழிந்த நிலையில் இருப்பதால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
முன்னதாக அதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் ரிசர்வ் வங்கி வழங்கி உத்தரவிட்டது.
மேலும், ரூபாய் நோட்டுகளில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளையும், கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையும், 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்களையும் வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் 6 நாட்களே இருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன்வரை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. அதன்பிறகு அவற்றை செல்லாததாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment