Friday 12 December 2014

அரசு மருத்துவமனையில் குழந்தை சாவு: 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு செவிலியர்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகேயுள்ள ஓகை பேரையூரைச்  சேர்ந்தவர் அம்பேத்கர் (35). இவரது மனைவி சங்கீதா (29). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
மீண்டும் கர்ப்பிணியான சங்கீதா திருவாரூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக டிச. 4-ம் தேதி அனுமதிக்கப்பட்டு  பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும்,  குழந்தையும் நலமாக இருப்பதாக செவிலியர்கள்  மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெண் குழந்தை திடீரென உடல்  நலக்குறைவு ஏற்பட்டு டிச. 9-ம் தேதி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததே  காரணம் எனக்கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணபிரான், குழந்தைக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மங்கையர்கரசி, ரம்யா ஆகிய இருவரையும் புதன்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment