Saturday 28 February 2015

கொடிநகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாரூர் கொடிக்கால் பாளையம் மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை 28/2/2015 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் கலிலூர் ரஹ்மான் தலைமை வகித்தார் .இதில் ஒய்வு பெற்ற சுங்க துறை துணை கண்கணிப்பாளர் முஹம்மது ஆதம் கண்காட்சியை துவங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஜலாலுதீன்,பொருளாளர் முஹம்மது அப்துல் காதர்,நிர்வாககுழு உறுப்பினர்கள் அப்துல் பத்தாஹ்,சேக் முஹம்மது ,நிஷாத் அலி ,ஹிதாயத்துல்லாஹ் பள்ளி தலைமையாசிரியை கலையரசி மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ரோட்டரி கிளப் ஆப் டேங்க் சிட்டி தலைவர் பாஸ்கரன் பள்ளிக்கு 30 மேசைகளை வழங்கினார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பெற்றோர்கள் பொதுமக்கள் ,கொடிக்கால்பாளையம் நகராட்சி துவங்கப்பள்ளி மாணவர்கள் கண்டு பயன் அடைந்தனர்.மேலும் அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி கள்  சாரா மற்றும் சப்பனா வுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது

'

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாதது திருவாரூர் மக்களிடை யே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி கூறியது:
மத்திய அரசின் 2015-2016 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார்.
இதில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி, திருநெல்வேலி - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு, பாலக்காடு - திருச்சி ரயில் நாகூர் வரை நீட்டிப்பு, விழிப்புரம் - மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு.
மன்னார்குடி - சென்னை மற்றும் சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் திருவாரூர் வழியாக இயக்குவது, மன்னார்குடியிலிருந்து புறப்படும் ரயில்கள் திருவாரூர் வழியாக செல்வது உள்ளிட்டவைகளில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லையென்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணி, நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எவ்வித அறிவிப்பும் இல்லாததது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

Friday 27 February 2015

தபால் நிலையங்களில் அறிமுகம் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம்



திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும்  செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


பெண் குழந்தைகளை பாதுகாக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இதன்படி இந்த திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடையை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளர் கணக்கை தொடங்கலாம்.

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம் 2 கணக்குகளை தொடங்கலாம். 1 வயது குழந்தைக்கு கணக்கு தொடங்கினால் 10 வயது ஆகும் போது கணக்கு முடிவடையும்.  கணக்கு தொடங்கும் தேதியில் இருந்து குழந்தைக்கு 14 வயது முடிவடையும் வரை கணக்கில் பணம் செலுத்தலாம். அந்த குழந்தைக்கு திருமணம் ஆகும் வரை கணக்கை நீட்டித்து கொள்ளும் வசதி உண்டு.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1000 மற்றும் அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்தலாம். குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தவில்லை என்றால் குறைந்த பட்ச தொகையுடன் ரூ.50 செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம்.

பணத்தை ரொக்கமாகவோ காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தலாம். இந்த திட்டத்தில் 9.1 சதிவீதம் வட்டி வழங்கப்படும். வட்டி விகிதத்தை வருடாந்திர அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கும். பெண் உயர் கல்விக்காக செலுத்திய தொகையில் 50 சதவீதம் வரையில் எடுத்து கொள்ளலாம். வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80சி-யின் கீழ் வருமான வரிவிலக்கு பெற தகுதியானது.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்திய தபால் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் காப்பீட்டு தொகை அதிகபட்சமாக ரூ.20 லட்சமாக இருந்து வந்தது. தற்போது இந்த காப்பீட்டுத்தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அனைத்து தபால் நிலையங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

Thursday 26 February 2015

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது சேவை மையம் தொடக்கம்


திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொது சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தொடக்கி வைத்தார்.
இச்சேவை மையத்தின் மூலம் வருமான, இருப்பிட, விதவை, சாதி, முதல் தலைமுறை பட்டதாரி ஆகிய சான்றிதழ்கள், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், விதவை மறுமண நிதியுதவி திட் டம், ஏழை பெண் திருமண நிதியுதவி திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஆகியவற்றும் விண்ணப்பிக்கலாம். மேலும் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.
தவிர மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆதார் அட்டை பெற ஒப்புகை சீட்டு இருந்தால் அதை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் பெற அதன் தொடர்பான காவல்துறையின் சான்று பெற விண்ணப்பிக்கலாம். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தவணைத் தொகையை செலுத்தலாம் என்றார் மதிவாணன்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்


பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிகழாண்டு முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது.
இந்தச் சான்றிதழ் மூலம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வை 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறியது:
நிகழாண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (புரவிஷனல் சர்ட்டிஃபிகேட்) வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் புகைப்படம், பதிவு எண், மதிப்பெண் விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் இந்தச் சான்றிதழை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு, அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களின் சான்றொப்பத்தை மாணவர்கள் பெற வேண்டும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மதிப்பெண் சான்றிதழைப் பிழையின்றி அச்சடிக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் 90 நாள்களுக்கு செல்லத்தக்கதாக இருக்கும் என்றார் அவர்.
மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால், மாணவர்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்குப் பிறகே அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், திருத்தங்கள் அதிகமில்லாமல் சரியான தகவல்களுடன் மதிப்பெண் சான்றிதழைத் தர முடியும். தாற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஏதேனும் தகவல் பிழைகள் இருந்தால், அவற்றை அசல் மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புகாருக்கு இடமில்லாமல் நடத்த வேண்டும்: கூட்டத்தில், பொதுத் தேர்வுகளை எந்தவிதப் புகாருக்கும் இடமில்லாமல் நடத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்கூட்டியே சென்று தேர்வு ஏற்பாடுகளை மேற்பார்வையிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கான பாதுகாப்பு, வினாத்தாளை எடுத்துச் செல்லும் வழித்தடங்கள், விடைத்தாள்களை மாவட்டங்களில் உள்ள மையங்களுக்குக் கொண்டு செல்வது, பறக்கும் படைகளை அமைப்பது போன்றவை தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday 25 February 2015

எல்.கே.ஜி அட்மிஷன் குழப்பங்கள்


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.
ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது... 2 வயது தொடங்கியதுமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண்மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்
ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடுப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண்ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்
முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.
சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.
இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மிஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளியில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.
சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேடவேண்டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு முறை. பிரபலங்கள் சிபாரிஸை எடுத்து கொள்ளும் சில பள்ளிகள் அரசியல்வாதியின் ரெக்கம்மண்டேஷனை மதிப்பதில்லை.
அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசின் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்துவிடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்
விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.
சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொனேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாயம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.
ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது 'கல்வி உரிமைச் சட்டம்' இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளியிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.
சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.
மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மிஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.
அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமுறைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.
இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

வரும் மார்ச் 31 முதல் ஆபாச வீடியோ,புகைப்படங்களுக்குத் தடை விதிக்கும் கூகுள்


இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது பிளாக்கர். கூகுளுக்கு சொந்தமான இதில் பலர் கதை கவிதை உள்ளிட்ட பல செய்திகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இலவசமாக பயன்படுத்தும் இந்த பிளாக்கரில் பலர் ஆபாச வீடியோ,போட்டோக்களை பதிவிடுகின்றனர். இந்நிலையில்  வரும் மார்ச் 31ம் தேதி முதல் பிளாக்கரில் ஆபாச வீடியோ, புகைப்படங்களை பதிவிட கூகுள் நிறுவனம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து கூகுள் கூறுகையில், தற்போது இந்த வகையான வலைப்பூக்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் பிளாக்கரில் ஆபாச தளத்திற்குரிய adult பிரிவை தேர்வு செய்யவேண்டும் என்றும் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் கூகுள் நிறுவனமே செய்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

Tuesday 24 February 2015

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?


அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மக்களை அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் வந்து மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது.
இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இத்தனைக்கும் இது ஓர் உயிர்க்கொல்லி நோய் இல்லை. எளிதாகத் தடுத்துவிடக் கூடியதுதான். உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை நமக்குச் சவால் விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. தோற்றுத்தான் போகிறோம். ஊட்டச்சத்துக் குறைபாடும், நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து காணப்படுகிற நம் சமுதாயத்தில், தொற்றுக் காய்ச்சலால் ஏற்படுகிற உயிர்ப் பலிகளை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம், நம்மிடம் போதுமான எச்சரிக்கை விழிப்புணர்வு இல்லை. நோயை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும் பரிசோதனைக்கூடங்கள் மிகவும் குறைவு. இதனால், நோயைக் கணிப்பதற்குள் நோயாளிக்கு மரணம் நெருங்கிவிடுகிறது.
பன்றிக் காய்ச்சல் தோற்றம்
முதன்முதலில் 2009-ல் மெக்சிகோவில் இந்தக் காய்ச்சல் பரவி, லட்சக் கணக்கில் உயிர்ப் பலி வாங்கியது. பன்றியிடம் காணப்பட்ட வைரஸும் மனிதரிடம் காணப்பட்ட வைரஸும் ஒன்றுபோலிருந்த காரணத்தால், இதற்கு ‘பன்றிக் காய்ச்சல்’(Swine Flu) என்று பெயரிட்டார்கள். இது காற்று மூலம் பரவும் தொற்றுநோய். பன்றியிடமிருந்து மனிதருக்குப் பரவுவதில்லை. ‘ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ்’ எனும் வைரஸ் கிருமி மனிதரைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் வருகிறது. மற்ற பருவக் காலங்களைவிட, குளிர்காலத்தில் இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. தென்னிந்திய மாநிலங்களில் இன்னமும் அதிக அளவில் குளிர் நீடிப்பதால் பன்றிக் காய்ச்சல் பரவ சாதகமாகிவிட்டது.
எப்படிப் பரவும்?
நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவக்கூடியவை. ஆகவே, காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மூன்று வகை நோயாளிகள்
சாதாரண ஃபுளு காய்ச்சலைச் சேர்ந்ததுதான் பன்றிக் காய்ச்சல். இதன் அறிகுறிகளை வைத்து நோயாளிகளை மூன்று வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். முதல் வகையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்காது. எனவே, ரத்தப் பரிசோதனை தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் நோய் கட்டுப்பட்டுவிடும். இரண்டாம் வகையில், இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் கடுமையாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். சோர்வு கடுமையாகும். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை அவசியம். காய்ச்சலைக் குறைக்க ‘டாமிஃபுளு’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மூன்றாம் வகையில், மேற்சொன்ன அறிகுறிகளுடன் மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இவர்களுக்கு ‘டாமிஃபுளு’ மாத்தி ரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும்.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டவர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது. இவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தடுப்பது எப்படி?
இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத் தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது.கைகுலுக்காதீர்கள். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப்போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை அணியுங்கள். சுய மருத்துவம் வேண்டாம். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
ஃபுளு காய்ச்சலைத் தடுக்க உதவுகின்ற ‘வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’யை (Trivalent inactivated vaccine - TIV) மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் போட்டுக்கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். எனவே, வருடாவருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் எப்போதும் வராது.
அரசின் கடமை
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் இப்போது ஆண்டுதோறும் குளிர்காலத்தில் பரவுகிற பருவக் காய்ச்சலாக மாறிவருகிறது. நடைமுறையில், நோய் பரவி இறப்போர் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் மாநிலஅரசும் மத்தியப் பொதுசுகாதாரத் துறையும் களத்தில் இறங்குகின்றன. பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மாத்திரை, மருந்துகளைவிடவும் மிக முக்கியமானது நோய்த்தடுப்பு. பன்றிக் காய்ச்சலுக்குரிய கிருமிகளின் தன்மையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், நோய் பரவ வாய்ப்புள்ள மழைக்காலத்துக்கு முன்பே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை உஷார்படுத்துவதும் நோய் தொடங்கிய பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதும் இந்தக் கொள்ளைநோயால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க சரியான வழி. தவிர, இந்தக் காய்ச்சலை உறுதிசெய்யும் ரத்தப் பரிசோதனை வசதியை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக்கிவிட்டால், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி உயிரைக் காப்பாற்ற முடியும்.
பன்றிக் காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை 500-லிருந்து 1,000 ரூபாய் வரை இருக்கிறது. இதனால், இதை மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே போடுகிறார்கள்.இதையே உள்நாட்டில் தயாரித்தால் இதன் விலை 100 ரூபாய்க்குத் தர முடியும். அப்போது பொதுமக்களுக்கும் அதைப் போட முடியும். இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களைப் பொறுத்தவரை பொது சுத்தம் மிக முக்கியம்.

Monday 23 February 2015

விவசாயிகள் நலனை அரசு காத்திடும்: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்


நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.
தேச அளவிலான அரசியல் களத்தில், நிலம் கையகப்படும் சட்ட விவகாரம் வலுத்துள்ள நிலையில், விவசாயிகள் நலன் காத்திடும் அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினர்.
இந்த உரையில், சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. எனினும், இந்தச் சட்டம் குறித்து பேசும்போது, விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்:
நாடாளுமன்றத்தின் மரபுகள் பேணப்படும். கூட்டத்தொடர் சுமுகமாக நடத்தப்படும்.
உள்நாட்டிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் கருப்புப் பணம் பதுக்கலை தடுக்க அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அண்டை நாடுகளுடன் சுமுக உறவைப் பேணுவதில் இந்தியாவின் எதிர்கால நலன் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அரசு இயங்குகிறது.
மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனில் அரசு உரிய கவனம் செலுத்தி வருகிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை வேரறுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேசிய நதி நீர் இணைப்புத் திட்டங்களை உரிய ஆலோசனையின் பேரில் நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது.
* இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.17 வரை குறைக்கப்பட்டுள்ளது.
சட்டத்துறையில் சீர்திருத்தங்கள்
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4% என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல முன்மாதிரியாகும்.
* தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் பணி தொடங்கும்.
* நீதிபதிகள் நியமனக் குழு உள்ளிட்ட சட்டத்துறை சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டமாக இந்தியாவின் சமையல் எரிவாயு மானியதிட்டம் உள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கை தொடங்கும் 'ஜன் தன்' திட்டம் 100% எட்டவுள்ளது. 6 மாத காலத்தில் இது சாத்தியமாகியுள்ளது.
*திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான துறை ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெறுவர்.
*நாட்டின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் வளர்ச்சி காண்பதே இந்த அரசின் நோக்கம்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்...
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அவர்களது குடும்பத்தார் நலனைப் பேணுவதில் அரசு முழுமுதற் கவனம் செலுத்துகிறது.
விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் வகையில், நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மையை கடைபிடித்தல் மற்றும் நியாயமான நிவாரணம் பெறுவதற்கான உரிமையைப் பேணுதல் ஆகியனவற்றை உறுதி செய்யும் வகையில் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலம், அத்தியாவசிய கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை கணிசமாக குறைக்க வழிவகை செய்யப்படும்.
வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம்
*அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50% பணத்தை தொகுதியின் தூய்மைப் பணிகளுக்காக செலவிட வேண்டும்.
அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
* நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. அதிலும், அரசின் நடவடிக்கைகளால் மொத்த விற்பனை பணவீக்கம் 3 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக மைனஸ் அளவில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday 22 February 2015

துபாயில் 79 மாடி குடியிருப்பில் தீ - வீடுகளில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு


துபாயில் தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு. | படம்- ராய்ட்டர்ஸ்
ஐக்கிய அரசு எமிரேட்ஸின் முக்கிய நகரமான துபாயில் உள்ள 79 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
1105 அடி உயரமுள்ள இந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான, ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்றாகும். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்போ, பெரிய அளவில் யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டிடத்தில் 50-வது தளத்தில் தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். கட்டிடத்தில் தீப்பிடித்ததை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். வெளியேற முடியாமல் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
கட்டிடம் உயரமானது என்பதாலும், காற்று வீசியதாலும் எளிதாக தீயை அணைக்க முடியவில்லை. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகுதான் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. குடியிருப்பின் சுமார் 20 மாடிகள் முற்றிலுமாக நாசமாகிவிட்டன. கட்டிடத்தில் எரிந்த தீ சில கி.மீ. தொலைவு வரை தெரிந்ததாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பின் அடுத்தடுத்த மாடிகளுக்கு தீ பரவியபோது ஜன்னல் கண்ணாடிகள் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறி கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. பக்கத்தில் இருந்த அடுக்குமாடி கட்டடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட பிறகு பக்கத்து அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் துபாயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்துவிட்டன. தீயினால் கட்டிடம் எந்த அளவுக்கு பலவீனமாகியுள்ளது என்பதை வல்லுநர்கள் குழு ஆராய இருக்கிறது. அதன் பிறகு அந்த கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்வதா அல்லது இடிக்க வேண்டுமா என்பது முடிவு செய்யப்படும்.
உலகில் அதிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட பகுதிகளில் ஒன்றாக துபாய் உள்ளது. 2012-ம் ஆண்டில் இங்குள்ள 34 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. சிகரெட்டில் இருந்த தீ அணைக்கப்படாமல் வீசப்பட்டதே அந்த விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது.-ஏ.எப்.பி.

சீனம், அரபு மொழிகளில் திருக்குறள்


திருக்குறளை சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்துள்ளதாக தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மூ. ராசாராம் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடின.
விழாவுக்கு தலைமை தாங்கி தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மூ. ராசாராம் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் தமிழின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழின் சிறப்புகளை பிற நாட்டு அறிஞர்களும் எடுத்துரைத்துள்ளனர். மதத்தைப் பரப்ப வந்தவர்கள் கூட தமிழை நேசித்தனர். தமிழுக்கு 11 ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் அபோரிஜின்கள், மோரீஷஸ் நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் உருவ ஒற்றுமை உள்ளது. அந்த நாடுகள் கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பகுதிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மொழியை அழித்து விட்டால் இனம் அழிந்து விடும். சிங்கப்பூர், மலேசியாவில் தேசிய மொழியாக தமிழ் உள்ளது. தாய் மொழியில் படித்தால்தான் சிறப்பு. இந்தியாவில் 4 வகையான மொழிக் குடும்பங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழே.
தமிழகத்தில் 36 வகையான பழங்குடியினர் உள்ளனர். வேலை தேடி வெளி இடங்களுக்குச் செல்வது, இடம் பெயர்வது போன்ற காரணங்களால் அவர்களது மொழிகள் அழிந்து வருகின்றன. அவற்றின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் கணினியில் தமிழைச் சேர்க்க வேண்டும். மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை தமிழில்தான் அனுப்ப வேண்டும்.
உலகப் பொதுமறையான திருக்குறளை அதிகம் பேர் பேசும் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்க அரசு உத்தரவிட்டிருந்தது. மொழி பெயர்ப்புப் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளன. அதேபோல, பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்துள்ளன என்றார் ராசாராம்.
விழாவில் சிறப்புரையாற்றிய "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது:
தாய் மொழிப் போராட்டத்தை முதலில் தொடங்கி வைத்தவர்கள் தமிழர்கள்தான் என்பது பரவலாக அறியப்படவில்லை. மேற்கு பஞ்சாப், சிந்து பகுதிகளும், கிழக்கு வங்காளமும் இணைந்து பாகிஸ்தான் உருவானது. அப்போது பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர்.
பாகிஸ்தானுக்கான ஆட்சி மொழி அறிவிக்கப்பட்ட போது, வங்க மொழி புறக்கணிக்கப்பட்டது. இதைக் கண்டித்து 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 4 வங்க இளைஞர்கள் உயிரிழந்தனர். அதன் நினைவாகத்தான் "உலகத் தாய்மொழி நாள்' அனுசரிக்கப்படுகிறது.
ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தாய்மொழிக்காக நடத்தப்பட்ட முதல் போராட்டம் அதுதான். வரலாற்றை எழுதியவர்கள் தென்னகத்தைப் புறக்கணித்து விட்டனர். அதில் ஒன்று தமிழ் மொழிக்கான போராட்டத்தைப் பதிவு செய்யாமல் விட்டதாகும்.
இன்னும் 100 ஆண்டுகளில் 25 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த 25 மொழிகளில் 8-ஆவது இடத்தில் தமிழ் உள்ளது.
காரணம் என்ன? சொந்த மக்களால் கைவிடப்படுவது, வேற்று மொழியின் ஆதிக்கம் அதிகரித்து மொழியின் கழுத்து நெரிக்கப்படுவது, மொழியைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிடுவது, தாய் மொழி மதிப்பு குறைவானது என அந்த மொழியினரே கருதுவது உள்ளிட்ட காரணங்களாலே மொழி அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இவையனைத்தும் தமிழுக்கு நேர்ந்து வருகிறது என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். மொழியை இழந்துவிட்டால், நம் அடையாளத்தை இழந்துவிடுவோம்.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் அழிந்துள்ளன. அந்த நிலை தமிழுக்கு நேர்ந்துவிடக்கூடாது.
பேசும்போது, இயன்றவரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் இயக்கமாக மாற்ற வேண்டும்.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.
தாய்மொழிக் கல்வி: இப்போது ஆயிரக்கணக்கில் ஆங்கில மழலையர் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. அடிப்படைக் கல்வி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். உயர் கல்வியை ஆங்கிலத்தில் படித்துக் கொள்ளலாம். அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் பெற்றால்தான் புரிதல் ஏற்படும். சாதனை புரிந்த அப்துல் கலாம், சர்.சி.வி. ராமன் போன்ற பலரும் ஆரம்பக் கல்வியை தமிழில் பயின்றவர்கள்தான்.
தமிழில் பேசுவோம், தாய்மொழியில் பேசுவோம் என்று தமிழகம் முழுவதும் ஒவ்வோர் ஊரிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களும், மாணவர்களும் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நமது தலைமுறையுடன் தமிழை அழிந்து போக விட்டுவிட முடியாது. தாய்மொழி அழிந்தால் நமது இனத்தின் அடையாளம் அழிந்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
"பேசும்போது இயன்றவரையில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவேன்' என்ற உறுதிமொழியை உலகத் தாய் மொழி தினத்தில் அனைவரும் ஏற்கவேண்டும் என்றார் அவர்.
முன்னதாக அலுவலகக் கோப்புகளில் தமிழ் மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் (கடன் அற்றவை) க. பத்மஜாவுக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கவியரங்கமும் கருத்தரங்கமும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ. விசயராகவன், மதுரை உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் (பொறுப்பு) பசும்பொன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோ. செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday 21 February 2015

மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்தவருக்கு ஓராண்டு சிறை


மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்து விற்ற, மருந்துக் கடை (மெடிக்கல்ஸ்) உரிமையாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உதயமார்த்தாண்டபுரத்தில் ஆறுமுகநாதன் என்பவர் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர் தனது கடையில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பட்டது.
இதனடிப்படையில் அப்போதைய நாகை மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் ஆர். இளங்கோவன் கடந்த 26.9.2012 அன்று ஆறுமுகநாதனின் மருந்துக் கடையில் ஆய்வு நடத்தியபோது மருத்துவர் பரிந்துரையின்றி, மருந்தாளுநர் மேற்பார்வையின்றி, ரசீதுகளின்றி மருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆறுமுகநாதன் மீது 6.6.2013 அன்று திருவாரூர் மாவட்ட முதன்மை உதவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்குத் தொடுத்த மருந்துகள் ஆய்வாளர் இளங்கோ பணியிட மாற்றத்துக்குப் பிறகு மன்னார்குடி சரக மருந்துகள் ஆய்வாளர் ஆர். தனபால் வழக்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராமு ஆறுமுகநாதனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
ஆறுமுகநாதன் 6.3.2015 வரை முன்ஜாமீன் பெற்றுள்ளதால், ஜாமீன் காலம் நிறைவடைந்தபின் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

Friday 20 February 2015

நமதூர் நிக்காஹ் தகவல் 26/02/2015






நமதூர்  நடுத்தெரு முஹம்மது அபுசாலிஹ் அவர்களின் மகளார் சாஹிரா பேகம் மணமகளுக்கும்  காரைக்கால் அப்துல்பத்தாஹ் அவர்களின் மகனார் பாஜில் நுல் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா  அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436 ஜமாத்துல் அவ்வல் பிறை  6(26/02/2015)அன்று  வியாழன் முற்பகல் 11.45 மணிக்கு நமது     முஹ்யித்தீன்  ஆண்டவர்கள்  பள்ளிவாசலில் நடைபெற உள்ளது









மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .



நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது


... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...


பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

நமதூர் நிக்காஹ் தகவல் 22/02/15






நமதூர்  நடுத்தெரு சஹாபுதீன் அவர்களின் மகனார் தமீமுல் அன்சாரி மணமகனுக்கும் காட்டூர் முஹம்மது பாரூக் அவர்களின் மகளார் நிலோபர் ஜாஸ்மின் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா  அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1436  ஜமாத்துல் அவ்வல் பிறை  2(22/02/2015) அன்று ஞாயிறு  முற்பகல் 11:30மணிக்கு காட்டூர் மனமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது









மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .


நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

10ம் வகுப்பு தனித்தேர்வு: இன்று முதல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான நுழைச்சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தனித்தேர்வு மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Thursday 19 February 2015

முத்துப்பேட்டை கந்தூரி விழா: திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மார்ச் 2-ம் தேதி கந்தூரி விழாவை முன்னிட்டு, அன்று திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முத்துப்பேட்டை தர்காவில் பிப். 20-ம் தேதி கந்தூரி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு கந்தூரி விழா மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக மார்ச்-14-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக இருக்கும். எனினும் மார்ச் 2-ம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிப். 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்


தமிழகம் முழுவதும் 2-ஆம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-ஆவது தவணை முகாமை சிறப்பாக நடத்த மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள், அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளிலும் கூட  முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் பணிகளில் பொது சுகாதாரத் துறை, கல்வித்துறை, சமூகநலத்துறை, வருவாய்த் துறை, தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அரசு பணம் கையாடல்: கல்வித்துறை ஊழியர்கள் 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!


 










சென்னை:தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய  பணத்தை கையாடல் செய்ததாக, 5 ஊழியர்களை அரசு தேர்வுத்துறை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு தேர்வுத்துறை சார்பில் ஒவ்வொரு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பப்படும். இந்த பணத்தை செலவழித்து விட்டு கணக்கு காட்டி, மீதிதொகையை அரசு தேர்வுத்துறைக்கு சம்மந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிளஸ் 2 உடனடித்தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பு தேர்வுக்கு அனுப்பப்பட்ட முன் பணத்தை கையாடல் செய்திருப்பதாக 5 கல்வித்துறை அதிகாரிகள் மீது அரசு தேர்வுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குனர் கருப்பசாமிக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014ம் ஆண்டு நடந்த பிளஸ் 2 உடனடித்தேர்வு மற்றும் ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வு செலவுகளுக்காக அரசு தேர்வுத்துறை அனுப்பிய முன் பணத்தை சரிவர சமர்ப்பிக்காமல் கையாடல் செய்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்ட திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் சூப்பிரடண்ட் சக்திவேல், அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளர் நாகராஜ், தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த உதவியாளர் தனபால், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தின் உதவியாளர் அகிலன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் உதவியாளர் லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேரை தற்காலிகமாக சஸ்பென்ட் செய்து அந்த உத்தரவு நகலை அரசு தேர்வுத்துறை இயக்குனர கத்திற்கு அனுப்பி வைக்கும்படி உத்தரவிடப்படுகி றது.
இவ்வாறு இயக்குனர் தேவராஜன் அதில் கூறியுள்ளார்.

- எம்.கார்த்தி.