Tuesday 31 January 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 31/01/2017

*அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)*
*ஜனாஸாஅறிவிப்பு*

நமதூர் நடுத்தெரு கோஷ் வீடு மர்ஹூம் தாஹிர் அவர்களின் மனைவியும் ஜெய்னுதீன் அவர்களின் தாயாருமான ஜூனைதா பீவி அவர்கள் தீனா இப்ராம்ஷா தெருவில் காலணி இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

நல்லடக்கநேரம் மாலை 5 மணி
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் வளாகம்

Monday 30 January 2017

ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க இதுவரை இருந்த உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது. பிப்., 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.பழைய, 500 மற்றும், 1000 ரூபாயை வாபஸ் பெறுவதாக, நவ., 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு, வங்கி கணக்குகளிலும், ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.,களில் முதலில் ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் இது, 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஜன., 1 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என அனுமதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடித்தது.

இந்த சூழ்நிலையில், பிப்., 1 முதல் ஏ.டி.எம்.,களில் தற்போது உள்ள உச்சவரம்பான, 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவு நீக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கான உச்சவரம்பு கட்டுப்பாட்டை அவர்களை விதித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 29 January 2017

கொடிக்கால்பாளையத்தில் கொடியேற்ற விழா

கொடிக்கால் பாளையம் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் உள்ள ஆலமரத்து மேடையில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர பாச்சோற்று பெருவிழா மற்றும்  புதுப்பள்ளி தர்காவில் நடைபெறும் கந்தூரி    கொடியேற்றும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .

Saturday 28 January 2017

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மழை தொடரும்

கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது கன்னியாகுமரி அருகே நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து மேற்கு திசையில் நகர்வதால், அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Friday 27 January 2017

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விளக்கம் அளிக்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 4ம் தேதி முடிவடைந்தது. திமுக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.
திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு 19ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரணை நடத்தினார். திமுக மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலையே ரத்து செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த அரசாணைகள் அனைத்துக்கும் அவர் தடை விதித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று நடந்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து புதிய ஆணை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் செவ்வாய்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Thursday 26 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டம், டெல்லி பயணம், அவசரச் சட்டம்: ஓபிஎஸ்-க்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு எம்.சரவணன்

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமும், அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளன.
முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) முதல்வராகப் பதவியேற்றார்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 31-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக வேண்டும் என அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வெளிப்படையாக பேசத் தொடங்கினர்.
மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை, ''கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் ஒருவரிடம் இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கு நல்லது. எனவே, உடனடியாக சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும்'' என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்.
இதனால், எந்த நேரத்திலும் சசிகலா முதல்வராக பதவியேற்கலாம் என செய்திகள் வெளியாகின. இதனால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதிகாரம் இல்லாத முதல்வர் என்ற விமர்சனம் எழுந்தது.
முதல்வராக பதவியேற்றதும் முதல் முறையாக கடந்த டிசம்பர் 19-ம் தேதி டெல்லி சென்ற பன்னீர்செல்வம், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது உடன் சென்ற மு.தம்பிதுரைக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதன் மூலம் பன்னீர்செல்வம் தனது அரசியல் எதிரிகளை எதிர்கொள்ளத் தொடங்கி விட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், வார்தா புயலின்போது அதிரடியாக செயல்பட்டு மக்களை நேரடியாக சந்தித்த பன்னீர்செல்வம், கிருஷ்ணா நதிநீரைப் பெறுவதற்காக விஜயவாடா சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். வெறும் கடிதம் எழுதுவதோடு நின்று விடாமல் நேரில் சந்தித்தது அவரது செல்வாக்கை உயர்த்தியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் நடந்து வந்த போராட்டம் கடந்த 17-ம் தேதி முதல் தீவிரமாகியது. சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது.
போராட்டம் தீவிரமானதும் களத்தில் இறங்கிய பன்னீர்செல்வம், கடந்த 19-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய உள்துறையிடம் அளிக்கும்வரை அவர் டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறை, சட்டம், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஒரே நாளில் கிடைத்தது. இதனால் 20-ம் தேதியே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை மாணவர்கள் திரும்பப் பெறவில்லை. அலங்காநல்லூரில் முதல்வர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டாலும் போட்டியை நடத்த முடியவில்லை. போராட்டங்களும் ஓயவில்லை. ஆனாலும் மனம் தளராமல் சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் விளைவாக கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்ததும், மாலையில் பேரவை சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் பன்னீர்செல்வம் மேற்கொண்ட இந்த தொடர் நடவடிக்கைகளினால், ஒரு வாரம் தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்த ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் காவல்துறை தடியடி நடத்தியதும், வன்முறை நடந்ததும் கரும்புள்ளியாக அமைந்தது. ஆனாலும், மாணவர்களின் போராட்டத்துக்கு 6 நாட்கள் அரசும், காவல் துறையும் ஒத்துழைப்பு அளித்தது முதல்வர் பன்னீர்செல்வம் மீதான செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.
கடந்த வாரமே சசிகலா முதல்வராகப் பதவியேற்பார் என செய்திகள் வெளியானது. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டமும், ஓபிஎஸ் எடுத்த தொடர் நடவடிக்கைகளாலும் சசிகலா பதவியேற்பது மேலும் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றாலும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மாணவர்களின் போராட்டத்தினால் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரைக்கும் அதிமுக எம்.பி.க்களுக்கும் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்காத நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உடனடியாக அனுமதி கிடைத்தது. இதற்கு முதல்வரின் அணுகுமுறையும், செல்வாக்குமே காரணம் எனக் கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தைக் கடுமையாக விமர்சித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பொதுவாழ்வில் இருந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.விமர்சனங்களை தாங்கும் மனவலிமையை அண்ணா எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்’’ என்றார். அவரது இந்த மென்மையான அணுகுமுறை அவரது மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது
ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்தாலும் கடந்த இரு வாரங்களில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள், அவர் மக்கள் தலைவராக மாறி வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாடுபிடி வீரர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் கடந்த 18-ம் தேதி முதல்வரை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம், தான் வளர்க்கும் 4 ஜல்லிக்கட்டு காளை மாடுகளை முதல்வர் காட்டியுள்ளார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், ''நானும் மாடுபிடி வீரர்தான். அந்த ஆர்வத்தில் இப்போதும் காளைகளை வளர்த்து வருகிறேன்'' என கூறியுள்ளார்! இதனால் ஆச்சரியமடைந்த மாணவர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

குடியரசு தின விழா: முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஓபிஎஸ்

68-வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற விழாவில் காலை 8 மணியளவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் விருதுகளை வழங்கினார். மாணவ, மாணவிகளில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. பெரும்பாலான ஊர்திகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
முதல்முறையாக..
வழக்கமாக, சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வரும் குடியரசு தின விழாவில் மெரினா கடற்கரையில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். விருதுகளையும் பதக்கங்களையும் முதல்வர் வழங்குவார்.
ஆனால், தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். எனவே, தமிழகத்தில் முதல் முறையாக குடியரசு தினத்தில் முதல்வர் கொடியேற்றியிருக்கிறார்.
முதல்வராக 2-வது முறை:
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் 2-வது குடியரசு தின விழா இதுவாகும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். அவருக்கு பதில் முதல்வராக பதவியேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 25 January 2017

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்குப்  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல், உயரம் தாண்டுதலில் 1.89 மீ தாண்டி தங்கம் வென்றார். 
தங்கவேல்-சரோஜா தம்பதியின் மகன் மாரியப்பன், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் பாதத்தை முழுமையாக இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது, சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ) இறுதியாண்டு பயின்று வருகிறார். மாரியப்பனின் பாராலிம்பிக் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கியது.
பல்வேறு துறைகளில் அளப்பரிய சாதனைப் படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். 
மாரியப்பனின் பத்மஸ்ரீ விருது குறித்த தகவல் கிடைத்ததும், அவருடைய சொந்த ஊரான பெரிய வடகம்பட்டி கிராமத்தில் உற்சாகம் கரை புரண்டோடியுள்ளது.

Monday 23 January 2017

தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு நேரில் வந்து பார்வையாளர்களாக பார்வையிட்டனர்.

Sunday 22 January 2017

தமிழகத்தின் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் திரும்பிய முதல்வர்

ல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி போராடிவரும் மக்கள்  தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அலங்காநல்லூருக்குள் நுழைய விடாமல் தடுத்தாதால் அவர் தன் பயணத் திட்டத்தை  மாற்றியுள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் கண்டிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என மதுரை அலங்காநல்லூருக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஊருக்குள் வரவிடாமல் வழியில் தடைகளை போட்டு, மக்கள் ஊருக்குள் வரவிடாமல் செய்தனர். 
மேலும் ஒரு காளையையும் தர முடியாது என அவர்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால் , முதல்வர் பன்னீர் செல்வம் அலங்காநல்லூருக்கு பதில், நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில்
ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். ஆனால் அங்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அரசின் அனைத்து முயற்சி தோல்வியில் முடிந்தது. தமிழகத்தின் கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம்: முதல்வர் ஓபிஎஸ் பேட்டி


ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். நான் பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தமிழகம் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார். அதனை ஏற்று உள்துறை, சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெற்று குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு, தமிழக ஆளுநர் மூலம் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

கூட்டத் தொடர் இல்லாத நேரத்தில் அவசர சட்டம்தான் கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நீடித்த நிலையான சட்டம்தான். இனி, யாராலும் ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த முடியாது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. வாடிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளன. போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். மக்கள் விரும்பும்போது ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம்.

திங்கட்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டமாக இயற்றப்படும்'' என்று முதல்வர் கூறியுள்ளார்.

Saturday 21 January 2017

நாளையே ஜல்லிக்கட்டு: முதல்வர் பன்னீர்செல்வம் உற்சாக அறிவிப்பு

 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடை நீங்கியது. நாளையே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முறைப்படி அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வர விடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உள்ளம் பூரிக்கிறேன். மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில ஆளுநர் அவர்களிடமும் பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்ற நம் கனவு நனவாகி உள்ளது.

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு, 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
உச்சநீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்ற நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை விடாது நடத்திட வேண்டும், நமது பண்பாட்டுச் சின்னத்தை எவ்வாறேனும் காத்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ஜெயலலிதா அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
7.8.2015 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் அவர்களுக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்கள். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர். எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா அவர்கள் 22.12.2015 அன்று பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது. எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைக் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்களாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் 7.1.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்காத நிலையில் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இந்த ஆண்டும் நடைபெறாத நிலை ஏற்பட்ட காரணத்தால், இது தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.1.2017 அன்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். எனவே, நான் புதுடில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் புதுடில்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்திற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிட முனைந்து மேற்கொண்ட முயற்சிகளே இன்று இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு மூல காரணம் என்பதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் மற்றும் மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றுத் தர காரணமாக இருந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டைக் காத்திட அறவழியில் போராட்டம் நடத்திய மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும்  பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேதகு இந்திய குடியரசுத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கான மாநில அரசின் சட்ட திருத்தத்திற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் இன்று பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டு விட்டன. அரசமைப்புச் சட்டப்படி இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்ட முன் வடிவு 23.1.2017 அன்று தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் நாளையே (22.1.2017) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை காலை 10 மணிக்கு நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடைபெறும் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பார்கள்.
தமிழ்நாடெங்கும் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாணாக்கர்களும், இளைய சமுதாயத்தினரும்,  பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Friday 20 January 2017

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு: முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினேன். தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் இப்பிரச்சினையில் மாநில அரசின் முடிவுகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்தார்.
பிரதமர் வாக்குறுதியை ஏற்று, நேற்றிரவு டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அந்த ஆலோசனையின்படி மத்திய அரசின் மிருக வதை தடை சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நேற்றிரவே ஜல்லிக்கட்டு தொடர்பாக வரைவு அவசரச் சட்டம் தயார் செய்யப்பட்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி உள்துறை வாயிலாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெற்ற பிறகு மாநில ஆளுநர் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டத்தை பிறப்பிப்பார்.
சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி தயாரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வரைவு அவசரச் சட்டம் மத்திய உள்துறைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுப்பப்பட்டுவிட்டது. மத்திய அரசு மாநில அரசின் முடிவுக்கு துணை நிற்கும்.
எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நான் உறுதியளிக்கிறேன். ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களும், மாணவர்களும், பொதுமக்களும் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்"
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Wednesday 18 January 2017

தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த முடிவு

ஜல்லிக்கட்டு குறித்து நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்த முதல்வர் முடிவுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை கைவிடுமாறு மாணர்களை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் போராட்டம் தமிழர்களின் உணர்வுகளை பிரதிப்பலிக்கின்றன. ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார். 

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 30-இல் தொடங்கி, ஜனவரி 4-இல் நிறைவு பெற்றது. 100 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 38 சதவீதம் மட்டுமே மழைப்பொழிவு காணப்பட்டது.
இதையடுத்து, அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே நிலவி வந்தது. பல்வேறு இடங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவின் காரணமாக குளிர் காணப்பட்டது.
இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மைய அதிகாரிகள் கூறியது:-
தென்மேற்கு வங்கக் கடலில் தாய்லாந்து அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக உள்ளது. இதனால், ஜனவரி 19 (வியாழக்கிழமை) முதல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். புதன்கிழமை வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

Sunday 15 January 2017

கொடிக்கால்பாளையம் பைத்துல்மால் பொதுசபை கூட்டம்

நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் மஹ்சூம் மஹாலில் இன்று மாலை மணி 5:30க்கு பைத்துல்மால் பொதுசபை கூட்டம் நடைபெற்றது.
அதுசமயம் நிர்வாகிகளாக
தலைவர்: கா.செ.மு.அ.முஹம்மது நத்தர்
செயலாளர்: இ.கா.மு.சு.பஷீருதீன்
பொருலாளர்: மு.அப்துல் காதர்
மற்றும் அ.ஹாஜா ஷேக் அலாவுதீன்
ஆடிட்டர்: வெ.ப.மு.அ.அபூபக்கர்
ஆலோசகர்கள்:செ.மு.மு.
கலிலுர்ரஹ்மான் மற்றும் வா.மெ.மு.அ.பஜில் முஹம்மது ஆகியோரும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Saturday 14 January 2017

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்


திருவாரூர் மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது


திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனையை தடுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது மன்னார்குடி சாலையில் திருத்துறைப்பூண்டி ஆட்டூரை சேர்ந்த சின்னப்பன் (வயது 50), குடவாசல் திருவிடச்சேரியில் அதே பகுதியை சேர்ந்த சேகர் (55), நடப்பூரில் திருவாரூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (27), சம்பத் (32), குடவாசலை சேர்ந்த தாமஸ் (37) ஆகிய 5 பேர் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருத்துறைப்பூண்டி மேலமருதூரில் சாராயம் விற்பனை செய்த வேதாரண்யத்தை சேர்ந்த காளிதாஸ் (30) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Friday 13 January 2017

பொங்கல் பரிசு பை மற்றும் வேட்டி சேலை விநியோகம்

நமதூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதன்படி கொடிக்கால் பாளையத்தில்  பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நேற்று முதல் துவங்கி  குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, 2 அடி கரும்பு துண்டு ஆகிய பொருட்களை வழங்கபட்டது .

Wednesday 11 January 2017

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது

மக்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பச்சை அரிசி வைத்து பொங்கலிட்டு வழிபடுவர். பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது வழக்கம். வழிபாட்டில் கரும்பு, வாழை, மஞ்சள் கொத்துக்களுக்கு முக்கிய இடம் பிடிக்கும். பொங்கலை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
கிராமப்புறங்களில் இருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் விற்பனைக்காக வந்து குவிந்தன. சாலையின் இருபுறங்களில் கரும்பு கட்டுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு மும்முரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி அனைத்து திசைகளிலும் வாழை தார்கள் காட்சியளித்தன. பொங்கல் பண்டிகைக்காக திருவாரூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.

Tuesday 10 January 2017

தலகட்டு சோறு

நமதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஜமாஅத் வருடாந்திர பொதுக்கூட்டம் 09/01/2017 இரவு மணி 10 க்கு துவங்கப்பட்டு .இதில்
1.ஜமாஅத் வரவு செலவு கணக்கு
2.ஜமாஅத் பள்ளிக்கூடம் வரவு செலவு கணக்கு
3.பைத்துல்மால் வரவு செலவு கணக்கு
4.தீனா எஸ்டேட் வரவு செலவு கணக்கு
ஆகியவை வாசிக்கப்பட்டது
குளங்கள் மார்க்கெட் குத்தகை விடப்பட்டது.
நல்லிரவு 1:00 மணியளவில் தலக்கட்டு சோறு சமைக்கும் பணி தலைவர் அல்ஹாஜ் M.M.ஜலாலுதீன் அவர்களால் அடுப்பு பற்ற வைக்கப்பட்டு துவங்கப்பட்டது.

Monday 9 January 2017

உயர்மட்ட குழுவினர் ஆய்வு: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

உயர்மட்ட குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். திருவாரூரை அடுத்த மாங்குடி, தென்னவாராயநல்லூர் ஆகிய இடங்களில் கருகிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது அவர் கூறிய தாவது:-

கடந்த காலங்களில் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் இந்த அரசு பாதுகாத்துள்ளது. அதேபோல இப்போதும் அவர்களை பாதுகாத்து உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மயில் வாகனன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

மன்னார்குடி

முன்னதாக மன்னார்குடி, காரக்கோட்டை, தென்பாதி, குறிச்சி, மண்ணுக்குமுண்டான், தில்லைவிளாகம் ,இடும்பாவனம், சிங்களாந்தி, மணலி, மாங்குடி, சொரக்குடி, கண்டியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட வயல்களில் அமைச்சர் காமராஜ் தலைமையில் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மட்ட குழுவினரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆய்வின் போது மாநில சமூகநலத்துறை செயலாளர் மணிவாசன், எம்.பி.க்கள் தஞ்சை பரசுராமன், நாகை கோபால், மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி மற்றும் தாசில்தார்கள், வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருவாரூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியல்

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 1.1.2017 தகுதி நாளாக கொண்டு நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 மன்ற தொகுதிகள் உள்ளன. 1.9.2016 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4 மன்ற தொகுதிகளிலும் 4 லட்சத்து 84 ஆயிரத்து 176 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 86 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும், 18 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 71 ஆயிரத்து 178 வாக்காளர்கள் இருந்தனர். 2017 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்த வகையில் 4 மன்ற தொகுதிகளில் 13 ஆயிரத்து 230 ஆண் வாக்காளர்கள், 16 ஆயிரத்து 517 பெண் வாக்காளர்கள், 5 இதர வாக்காளர்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 752 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் 4 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 74 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 800 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இணையதளத்தில்

இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள சிறப்பு கிராமசபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் படித்து காண்பிக்கப்படும்.

வாக்காளர் பட்டியல்களை “election.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நேற்று முதல் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் தொடங்கியது. எனவே 1.1.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் படிவம்-6, நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாறி குடியேறியவர்கள் படிவம் 8-ஏ வில் விண்ணப்பிக்கலாம். மேலும் “election.tn .gov.inஇணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது வாக்காளர் பதிவு அலுவலர்களான உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி) மற்றும் அனைத்து கட்சியினர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Sunday 8 January 2017

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரை வங்கிகளின் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை!

கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கருப்பு பணத்தை ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அழிக்கும் விதமாகவும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் ரூபாய் நோட்டுகளை பிடிக்கும் விதமாகவும் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடந்த பல அதிரடி சம்பவங்களைத் தொடர்ந்து கருப்பு பணம் பதுக்கியவர்களின் வீடு, அலுவலகங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூபாய் நோட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் டிசம்பர் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4172 கோடி கணக்கில் காட்டப்படாத ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மத்திய அரசின் அறிவித்த நவம்பர் 8-ஆம் தேதிக்கு முன்னதாக, பெரிய அளவில் ரொக்கமாக செய்யப்பட்ட டெபாசிட்களை அறிய வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக பெரிய தொகையை டெபாசிட் செய்தவர்கள் விவரத்தையும் சேகரிக்க முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கிகள், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவை அதில் கடந்த 2016 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.2,5 லட்சம் டெபாசிட் செய்தவர்களின் கணக்கு விவரங்களையும் நடப்பு வங்கி கணக்கில் ரூ.12.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதை வங்கிகள் தாக்கல் செய்த பின் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
எனவே, இதற்கான விவரங்களை அளிக்குமாறு வங்கிகளை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Saturday 7 January 2017

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்வு: முன் தேதியிட்டு வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

நாடுமுழுவதும் ஓட்டுநர் உரிமம், புதுப்பிப்பு, வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை முன்தேதியிட்டு வசூலிக்க உத்தரவிட்டுள்ளதால் அலுவலர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இது தவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 6,210 பேர் புதிய வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. வாகனங்களுக்கான வரி வசூல் மாநில அரசுக்கும், இதர கட்டணங்களின் வசூல் மத்திய அரசிடமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், வாகன பதிவு, பயிற்சி பள்ளி தொடங்குதல் மற்றும் புதுப்பித்தல் உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இருப்பினும் டிசம்பர் 29-ம் தேதியை முன் தேதியிட்டு கட்டண உயர்வை வசூலிக்க உத்தரவிட்டுள்ள தால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், புதிய கட்டண விபரங்கள் தெரியாததால் வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கும் சேவை களுக்கான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவித முன்அறிவிப்புமின்றி, டிசம்பர் 29-ம் தேதி முதல் முன்தேதியிட்டு கட்டண உயர்வை வசூலிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், புதிய கட்டண விபரங்களை கணினியில் பதிவு செய்வதற்கே ஒரு நாள் முழுவதும் வீணாகிவிட்டது. மேலும், டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளை பெற்றவர்களிடம் எப்படி கட்டண உயர்வை வசூலிப்பது என்று தெரியாமல் அவதிப்படுகிறோம். இதுபோன்ற குழப்பங்களால் நேற்று தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கட்டண உயர்வு தொடர்பாக அரசு விரைவில் அதிகாரப்பூர்மான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

Friday 6 January 2017

ஏடிஎம்மில் பணமெடுக்கும் முன் சிந்தியுங்கள்

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் முன்பு, இது இந்த மாதத்தில் எத்தனையாவது முறை கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏன் என்றால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 1ம் தேதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு 2500 ரூபாய் (தற்போது இது 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது) மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதே சமயம், பொது மக்களின் நலனுக்காக, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த தளர்வு, டிசம்பர் 31ம் தேதியோடு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கு வைத்துள்ள வங்கியன் ஏடிஎம்கள் மூலம் மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்மில் 3 முறையும் மடடுமே பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.20 உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். எனவே, அதிக அளவில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள், டிஜிட்டல் முறையில் பணப்பரிமற்றம் செய்யவும், மின்சார கட்டணம், எல்பிஜி சிலிண்டருக்கான் கட்டணங்களை இணையதளம் வாயிலாகக் கட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அல்லது, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று பணம் எடுப்பதுவும் சிறந்தது.

Thursday 5 January 2017

ஆதார் விவரம் சேகரிக்கும் பணியை தனியாரிடம் விடுவது நல்லதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

தார் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சிகளிடம் விடுவது நல்ல யோசனை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆதார் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, “ஆதார் தகவல்கள் சேகரிக்கும் பணி தனிநபர் அந்தரங்கம் தொடர்பானது என்பதால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஆதார் புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் தனியார் ஏஜென்சிகள் ஈடுபட்டு வருகின்றன” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. என்றாலும் ஆதார் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவது நல்ல யோசனை அல்ல” என்றனர்.

உச்ச நீதிமன்றம் கடந்த 2015, அக்டோபர் 15-ம் தேதி, ஆதார் தொடர்பான தனது கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது. “அனைத்து ஓய்வூதியத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் வங்கிக் கணக்கு, நூறுநாள் வேலை திட்டம், சமையல் எரிவாயு வினியோகம், பொது விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று கூறியது.

இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாமாக முன்வந்து ஆதார் விவரம் தருவோரிடம் மட்டும் அந்த விவரம் பெறப்படும்” என்று அப்போது மத்திய அரசு உறுதி கூறியது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேர்வு

 திமுக செயல் தலைவர் பதவியை கட்சி தனக்கு திடீரென வழங்கிவிடவில்லை. அந்த முடிவு யோசித்து, ஆலோசித்து, சிந்தித்து எடுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு திமுக பொதுக்குழு கூடியது. உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதி பங்கேற்காததால் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.
பொதுக்குழுவில், திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை அறிவித்து தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், "அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நிகழ்ச்சி நிரலில் நிறைவாக நான் ஏற்புரை, நன்றியுரை ஆற்றப்போகிறேன் என்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை நான் நன்றியுரை ஆற்றுவதற்காக வரவில்லை. ஏற்புரை ஆற்றுவதற்காக மட்டும் தான் நான் உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன்.
நம்முடைய பொதுச் செயலாளர் இங்கே பேசுகின்றபோது, "தலைவர் மேடைக்கு வர முடியாமல், நடைபெறக்கூடிய பொதுக்குழுவாக இந்த பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் கருணாநிதி. அப்படிப்பட்ட தலைவருக்கு சற்று ஓய்வு கொடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு, நல்லமுறையில் அவர் தேறி வர வேண்டும் என்ற நிலையில், ஓய்வுக்கே ஒய்வு கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நமது தலைவருக்கு, ஓய்வு தந்திட வேண்டுமென்ற நிலையில், நம்முடைய பொது செயலாளர், நமது முதன்மைச் செயலாளர், நம்முடைய முன்னோடிகள் எல்லாம் கலந்து பேசி, இங்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் விதிமுறைகளில், சிறு திருத்தத்தைச் செய்து, அதனடிப்படையில், நம்முடைய பொதுச் செயலாளர் முன்மொழிய, முதன்மைச் செயலாளர் வழிமொழிய, செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என்னிடத்தில் வலியுறுத்தி, வற்புறுத்தி, அந்த நிலையில் இந்த பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்து, உங்களுடைய பேராதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக் கூடிய நான் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் என்று தயவுசெய்து யாரும் கருதி விடக்கூடாது.
"உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்க, உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்க" என்று சொல்லி, சொல்லி, சொல்லித்தான் இந்த இயக்கத்தில் எனது முதல்கட்டப்பணி தொடங்கியது.
அப்படி தொடங்கிய எனது பணியில் பல்வேறு பொறுப்புகளையும் அடைந்தேன். அந்தப் பொறுப்புகளுக்கு எல்லாம் வந்தபோது நான் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். அளவிட முடியாத அளவிற்கு பெருமைப்பட்டேன். ஆனால், இன்றைக்கு அந்த நிலையில் நானில்லை. இதுதான் உண்மை.
அன்றைக்கு அவற்றையெல்லாம் பெருமையோடு வரவேற்று, ஏற்றுக் கொள்கின்ற நேரத்தில், இன்றைக்கு தலைவர் அவர்கள் உடல் நலம் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், இந்தப் பொறுப்பை ஏற்கின்ற நேரத்தில் அந்த மகிழ்ச்சியை என்னால் அடையமுடியவில்லை.
எனவே ஒரு கனத்த இதயத்தோடுதான், உங்கள் அன்போடு, உங்கள் உற்சாகத்தோடு, உங்கள் பேராதரவோடு இந்தப் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக நான் உங்களிடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
அதிகம் பேச முடியவில்லை. பேச விரும்பவில்லை. ஆனால் ஒன்றை நான் குறிப்பிட விரும்புவது, செயல் தலைவர் என்று சொன்னால், தலைவருக்கு துணை நிற்கக்கூடிய நிலையில் தான் எனது பணி நிச்சயமாக அமையப்போகிறது.
தலைவர், பொது செயலாளர், அதனைத்தொடர்ந்து நமது முதன்மைச் செயலாளர், இங்கு இருக்கக்கூடிய கழக முன்னோடிகள் காட்டக்கூடிய வழியில் நிச்சயமாக, உறுதியாக நின்று, இயக்கப்பணியை உங்களுடைய ஒத்துழைப்போடு ஆற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
சென்னை மாநகரத்தின் மேயராக நான் பொறுப்பேற்ற நேரத்தில் கருணாநிதி சொன்னார், "மேயர் என்பது பதவியல்ல, ஒரு பொறுப்பு. அதை நான் பொறுப்பு என்று உன்னிடத்தில் எடுத்துச் சொல்லக் காரணம் என்னவென்று கேட்டால், பொறுப்போடு நீ பணியாற்ற வேண்டும், மக்களுக்கு நீ பொறுப்போடு கடமையாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
ஆக, செயல் தலைவர் என்பதை நான் பதவியாக கருதவில்லை, கருணாநிதி சொல்வது போல, ஒரு பொறுப்பாக கருதி, பொறுப்போடு பணியாற்ற நான் உறுதியெடுத்துக் கொள்கிறேன், என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் ஏற்புரை ஆற்றினார்.

Tuesday 3 January 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 03/01/2017

நமதூர் கொடிக்கால்பாளையம்   தெற்குத் தெருவில் குளத்தாங்கரையா  வீட்டு  ஷேக் அண்ணன் அவர்கள்  மௌத்தாகிவிட்டார்கள் . " இன்னா  லில்லாஹி  வஇன்னா  இலைஹி  ராஜிவூன் " அன்னாரின்  ஜனாஸா  இன்று  ( 3 - 1 - 2017 )  செவ்வாய்க்கிழமை மாலை  5 - 00   மணிக்கு  கொடிக்கால்பாளையம்  பள்ளிவாசல்  பொது மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும் . அன்னாரின்  மறுமைக்காக  துஆச் செய்யவும் .

Monday 2 January 2017

பழைய ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம்: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வரும் ஜூன் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித் திருக்கிறது. டிசம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ளாத இந்தியர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தியர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டு களை மாற்றிக்கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடை யாது. ஆனால் ஃபெமா விதிமுறை களின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகபட்சம் 25,000 ரூபாய் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
ஆதாரம் முக்கியம்
இந்தியாவில் வசிப்பவர்கள் முறையான அடையாள சான்று களை கொடுத்து பழைய நோட்டு களை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் வெளிநாட்டில் இருந்த வர்கள் இந்த இடைப்பட்ட காலத் தில் வெளிநாட்டில் இருந்ததற்கான ஆதாரமும், இதுவரை எந்த தொகையும் மாற்றிக் கொள்ள வில்லை என்பதற்கான ஆதாரமும் கொடுக்க வேண்டும். சம்பந்தப் பட்ட நபரைத் தவிர மூன்றாம் நபர் மூலமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது.
இந்த வசதி மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் நாக்பூர் ஆகிய நகரங் களில் இருக்கும் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயத்தில் நேபாளம், பூடான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியாது.

Sunday 1 January 2017

நிக்காஹ் 01/01/2017

பாரக்கல்லாஹுலக வபாரக்க அலைக்கவஜம அ பைனக்குமா ஃபீஹைர். ...

அடியக்கமங்கலம் B. அப்துல் ரஹ்மான் பைஜி அவர்களின் மகளார் A.கமருன்னிசா சுல்தானா  மணமகளுக்கும் அடியக்கமங்கலம் A.M தாஜூதீன் அவர்களின் மகனார் T.  ரூமைஸ்தீன்  மணமகனுக்கும் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி1438 ரபியூல் ஆகிர் பிறை 2 (01/01/2017)அன்று ஜாமியுல் மஸ்ஜித்தில் நடைபெறும் நிக்காஹ் மஜ்லிஸ்லில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்  இத்தம்பதியினருக்கு வல்ல நாயன் அல்லாஹ் எல்லா நலமும், வளமும் தந்து, ஒருவரை ஒருவர் நான்கு புரிந்து சிறந்த தம்பதியினாராய், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ துஆ வுடன் வாழ்த்துகிறேன்.
بارك الله لكما وبارك عليكما وجمع بينكما فى خير وأسأل الله أن يبارك لكم ويوفقكم ويسدد لكما ورزقكما ال ذرية الصالحة وجميع المسلمين
இல்லறமேற்க்கும் இனிய மணமக்களே!
சொல்லரிய புகழ் தங்கும் இல்லறத்தின்
சோபனத்தில் ஒன்றித்தே நீவிர்
தாஹாநபி வழிமுறைப் பேணி
மழலைகள் பல பெற்று பல்லாண்டு வாழ
உள்ளத்தின் நிறைவோடு வாழ்த்துகிறேன்!
ஒப்பற்ற இறைவனிடம் பிரத்திக்கிறேன்.
بارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
Barak Allaahu Lakumma wa Baraka `Alaykumma wa Jama`aa Baynakumma Fee Khayr.
அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.
வாழ்க மணமக்கள் வையத்துள் வாழ்வாங்கு
சூழ்கவே சுற்றம் தொடர்ந்து.

இன்று முதல் ஏடிஎம்மில் ரூ.4,500 எடுக்கலாம்: உச்சவரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.2,500-லிருந்து ரூ.4,500 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “பணத் தட்டுப்பாடு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு இப்போது உள்ள ரூ.2,500-லிருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற உச்சவரம்பில் மாற்றம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி ஆகும். ஆனால், கடந்த டிசம்பர் 19-ம் தேதி நிலவரப்படி ரூ.5.92 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி 21-ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.