Monday 9 January 2017

உயர்மட்ட குழுவினர் ஆய்வு: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

உயர்மட்ட குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். திருவாரூரை அடுத்த மாங்குடி, தென்னவாராயநல்லூர் ஆகிய இடங்களில் கருகிய பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், அமைச்சரிடம் தெரிவித்தனர். அப்போது அவர் கூறிய தாவது:-

கடந்த காலங்களில் விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் இந்த அரசு பாதுகாத்துள்ளது. அதேபோல இப்போதும் அவர்களை பாதுகாத்து உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தவறான முடிவுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மயில் வாகனன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

மன்னார்குடி

முன்னதாக மன்னார்குடி, காரக்கோட்டை, தென்பாதி, குறிச்சி, மண்ணுக்குமுண்டான், தில்லைவிளாகம் ,இடும்பாவனம், சிங்களாந்தி, மணலி, மாங்குடி, சொரக்குடி, கண்டியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட வயல்களில் அமைச்சர் காமராஜ் தலைமையில் உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மட்ட குழுவினரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆய்வின் போது மாநில சமூகநலத்துறை செயலாளர் மணிவாசன், எம்.பி.க்கள் தஞ்சை பரசுராமன், நாகை கோபால், மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி மற்றும் தாசில்தார்கள், வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment