Saturday 7 January 2017

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்வு: முன் தேதியிட்டு வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

நாடுமுழுவதும் ஓட்டுநர் உரிமம், புதுப்பிப்பு, வாகன பதிவு உட்பட 13 சேவைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வை முன்தேதியிட்டு வசூலிக்க உத்தரவிட்டுள்ளதால் அலுவலர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 63 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓக்கள்) உள்ளன. இது தவிர 60-க்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக 6,210 பேர் புதிய வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. வாகனங்களுக்கான வரி வசூல் மாநில அரசுக்கும், இதர கட்டணங்களின் வசூல் மத்திய அரசிடமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஓட்டுநர் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம், வாகன பதிவு, பயிற்சி பள்ளி தொடங்குதல் மற்றும் புதுப்பித்தல் உட்பட 13 சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இருப்பினும் டிசம்பர் 29-ம் தேதியை முன் தேதியிட்டு கட்டண உயர்வை வசூலிக்க உத்தரவிட்டுள்ள தால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், புதிய கட்டண விபரங்கள் தெரியாததால் வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கும் சேவை களுக்கான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவித முன்அறிவிப்புமின்றி, டிசம்பர் 29-ம் தேதி முதல் முன்தேதியிட்டு கட்டண உயர்வை வசூலிக்க வேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், புதிய கட்டண விபரங்களை கணினியில் பதிவு செய்வதற்கே ஒரு நாள் முழுவதும் வீணாகிவிட்டது. மேலும், டிசம்பர் 29-ம் தேதிக்கு பிறகு வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளை பெற்றவர்களிடம் எப்படி கட்டண உயர்வை வசூலிப்பது என்று தெரியாமல் அவதிப்படுகிறோம். இதுபோன்ற குழப்பங்களால் நேற்று தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கட்டண உயர்வு தொடர்பாக அரசு விரைவில் அதிகாரப்பூர்மான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment