Sunday 31 July 2016

டெல்லி விமான நிலையத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. எம்.பி.க்கள் கைகலப்பு



டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.க்கும், அ.தி.மு.க. பெண் எம்.பி.க்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
தாக்குதல்டெல்லி மேல்–சபை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் திடீரென்று தனது சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது, சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, எதிரே வந்த திருச்சி சிவாவை பார்த்தும், பாய்ந்து சென்று அவரது சட்டையை பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அப்போது சசிகலா புஷ்பா திடீரென்று திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த களேபரத்தில் திருச்சி சிவா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது.
பரபரப்புஉடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள். திருச்சி சிவாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சசிகலா புஷ்பா விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றார்.
இரு எம்.பி.க்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த கைகலப்பால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி பின்னர் திருச்சி சிவா கூறுகையில், ‘‘சசிகலா புஷ்பா காரணம் இன்றி திடீரென்று சட்டையை பிடித்து இழுத்து என்னை தாக்கினார்’’ என்றார்.
சசிகலா புஷ்பா கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி பற்றியும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றியும் திருச்சி சிவா தவறாக விமர்சித்ததால் அவரது கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 3–ந்தேதி தொடங்குகிறது

திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 3–ந் தொடங்குகிறது.
கலந்தாய்வு
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சரோஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:–
திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி துறை சார்பில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நடப்பு ஆண்டுக்கான பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 3–ந்தேதி தொடங்குகிறது.
அதன்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வருகிற 3–ந் தேதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் மூலம்), 4–ந் தேதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக்கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் மூலம்) நடைபெறுகிறது. 6–ந் தேதி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்துக்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) நடைபெறுகிறது.
பொது மாறுதல்
7–ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, 13–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, 14–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்). 20–ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் மூலம், 21–ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Saturday 30 July 2016

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை (ம) முதுகலை பட்டப் படிப்புகள், ஆய்வியல் நிறைஞர் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2016-17-ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் பயன்பெற w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பவர்களுக்கு ஆக.31 க்குள்ளும், இதர படிப்புகளான டிப்ளமோ, ஐடிஐ பட்டப்படிப்புகளுக்கு அக்.10-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   உதவித்தொகை பெற கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2  லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆதார் எண் குறிப்பிடுவது அவசியம். 
w‌w‌w.‌sc‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n இணையதள முகவரியில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளைப் பதிவேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய்த் துறையிடமிருந்து பெற்ற மதத்துக்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் அல்லது சுயசான்று ஆகியவற்றின் நகலுடன் கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து படிக்கும் கல்வி நிலையங்களில் அக்.31-ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.  உதவித்தொகை வங்கிக்கணக்கில் செலுத்துவதால் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெளிவாக கொடுக்க வேண்டும். மாணவர்களின் விண்ணப்பங்களைத் தொடர்புடைய கல்வி நிறுவனங் கள் நன்கு பரிசீலித்து அக்.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Friday 29 July 2016

வரப்போகிறது இந்தியாவிற்கு இ-பாஸ்போர்ட்!

லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், ''இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது'' என்றார்.
இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும்.
இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் இது கொடுக்கும்.
மிக விரைவில் குடிமக்களுக்கு இதை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, இந்திய அரசாங்கம். இதற்கான எலக்ட்ரானிக் சிப்களை தயாரிக்க (ISP) இந்தியா செக்யூரிட்டி பிரஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அறுபது நாடுகளுக்கு மேல் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பொழுது இ-பாஸ்போர்ட் இந்தியாவிற்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடிநகரில் மழை

கொடிக்கால் பாளையத்தில் இரண்டாவது நாளாக மழை பொய்த்தது .

Thursday 28 July 2016

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் .

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மதிவாணன் மாற்றப்பட்டு எல் .நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளனர் .இவர் முன்பு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய இணை நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார் .
இதைப்போல மாவட்ட எஸ் பி ஜெயச்சந்திரனும் மாற்றப்பட்டுள்ளார் .அவருக்கு பதிலாக மயில்வாகனன் நியமனம் 

திருவாரூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்தில் தாமதம்

திருவாரூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.
சென்னையிலிருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வந்தது. பின்னர், என்ஜின் மாற்றப்பட்டு காரைக்காலுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில், தண்டவாளத்தை மாற்றிச் செல்லும் இடத்தில் (பாய்ண்ட்) செல்லும்போது, அந்த இடத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மெதுவாகச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பியது.
இதுகுறித்து ரயில் நிலைய தொழில் நுட்பப்பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தண்டவாளம் பழுதுக்கு காரணமாக இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டு, பாய்ண்ட் சரி செய்த பிறகு நிலைமை சரியானது. இதையடுத்து ரயில்வே தொழில்நுட்ப அலுவலர்கள் ரயில்கள் இந்த இடத்தில் மெதுவாக செல்ல அறிவுறுத்தினர்.
இதன்காரணமாக, திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் குளிக்கரையில் நிறுத்தப்பட்டு, 1 மணி 40 நிமிடங்கள் தாமதமாக திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
இதேபோல், திருவாரூருக்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டிய மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் குளிக்கரையில் நிறுத்தப்பட்டு. ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிற்பகல் 11.10-க்கு வந்தது. எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் விரைவு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு காலை 9.50 மணிக்கு வரவேண்டும். இந்த ரயில் கொரடாச்சேரியில் நிறுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது.
இதேபோல், கோவா - வேளாங்கண்ணி செல்லும் வாஸ்கோடகாமா விரைவு ரயில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்து சென்றது.

Monday 25 July 2016

கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

திருவாரூரில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து, முறையாகப் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருவாரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 31 வார்டுகளில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, புதைச்சாக்கடைப் பணிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்னும் முழு அளவில் நிறைவடையாமல் உள்ளது. இதற்கிடையில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும், அடைப்புகள் ஏற்படும் காணப்படுகின்றன. இதனால், கழிவுநீர் முறையாக வடிந்து செல்லாமல், ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசிகிறது.
சில இடங்களில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுக்கின்றன. வடிகால் சிதிலமடைந்துள்ளதால், சிறிது நேரம் மழை பெய்தாலும், மழைநீர் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பேருந்து நிலையம், தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசுத் தொல்லை அதிகரித்து மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதைத் தடுக்க கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து, சுகாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Sunday 24 July 2016

காஷ்மீர் வன்முறையை கண்டித்து ரயில் மறியல் : 205 பேர் கைது

திருவாரூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 205 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சனிக்கிழமை மதியம் காரைக்காலில் இருந்த திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயிலை மறிப்பதற்காக பேருந்து நிலையத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடைகளை நகர்த்தி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து ரயிலை மறிக்க முயன்றனர். இதில் போராட்டத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தினர் ரயில்வே முதல் நடைமேடையில் நின்று கொண்டு காஷ்மீர் பிரச்னை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ராவுத்தாஷ தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி மாவட்ட செயலர்கள் அகமதுகபீர் (தஞ்சை தெற்கு), முகம்மது மரூப் (தஞ்சை வடக்கு), செய்யது ரியாசுதீன் (நாகை தெற்கு), மாலிக் (நாகை வடக்கு), நெய்னா முகம்மது (காரைக்கால்) உள்ளிட்ட 205 பேரை போலீஸார் கைது
செய்தனர்.

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் மறியல்

திருவாரூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே கேக்கரையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்துக்குள் நகர்ப்பகுதியின் வடிகால் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான பாசனவாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக தனியார் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை தூர்த்துவிட்டதாகக் கூறி விவசாயிகள் மற்றும் அப்பகுதியினர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தனியார் பள்ளி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஜேசிபி இயந்திரத்தையும் சிறைபிடித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த நகர காவல் நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

Saturday 23 July 2016

திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புகள் தொடக்கம்

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் மருத்துவக்கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகள், பட்டயப்படிப்புகள் தொடங்க கல்லூரி நிர்வாகம் கடந்த ஓராண்டாக முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து  நிகழாண்டு முதல் 9 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளைத் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டுக்கு 167 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். அறுவை அரங்க டெக்னீசியன்(20), அவசர சிகிச்சை டெக்னீசியன்(20), மயக்க மருந்து டெக்னீசியன்(20), எலும்பு முறிவு டெக்னீசியன்(6), காதொலி கருவி டெக்னீசியன்(2), மருத்துவப் பதிவேடு டெக்னீசியன்(2), டயாலிஸ் டெக்னீசியன்(2) ஆகிய 7 படிப்புகளும் ஓராண்டு சான்றிதழ் படிப்பாக நிகழாண்டு முதல் தொடங்க உள்ளன.
மேலும் 2 ஆண்டு பயிற்சி காலம் கொண்ட மருத்துவ ஆய்வக நுட்புநர் படிப்பிற்காக 75 இடங்கள், கதிரியக்க படிப்பிற்காக 20 இடங்கள் ஆகிய டிப்ளமோ படிப்புகள் தொடங்கப் பட உள்ளன.  2016 நவம்பர் முதல் டிப்ளமோ சேர்க்கை அறிவிப்புகள் வெளியிடப்படும். பயிற்சியில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். நிகழாண்டுக்கான எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும்.

Friday 22 July 2016

வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

திருவாரூரில் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது.
திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (38). இவர் புதன்கிழமை பனகல் சாலையிலுள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சம் எடுத்து இருசக்கர வாகனத்திலுள்ள பையில் வைத்துக்கொண்டு கடைவீதி பகுதியில் சென்றுள்ளார்.  அப்போது ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் துணிக் கடைக்குச் சென்றாராம். வெளியே வந்து பார்த்தபோது  பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்தி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்

2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வியாழக்கிழமை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கப்படும், அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் ஆகியவை நிதியமைச்சரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களாகும்.
திருத்திய பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,48,175.09 கோடியாகவும் ஒட்டுமொத்த கடன் ரூ.2,52,431 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.15,854.47 கோடியாகவும் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை காலை 11.00 மணி அளவில் பேரவையில் தாக்கல் செய்தார். அவரது அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
10 லட்சம் வீடுகள்:
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, பல்வேறு திட்டங்களின் கீழ், ஏழைகளுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும். மேலும், நகர்ப்புறங்களில் ஏழைக் குடும்பங்களை மறுகுடியமர்த்த ஒரு சிறப்பு நிதியமாக வீட்டுவசதி நிதியத்தை அரசு ஏற்படுத்தும்.
ஸ்மார்ட் குடும்ப அட்டை:
குடும்ப அட்டை தகவல் தொகுப்பை ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் அட்டை வடிவில் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த...:
அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்கல் நடத்தப்படும். இதற்காக ரூ.183.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.6,000 கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள்:
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு புதிய பயிர்க் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் நோக்கில் நிகழாண்டில் ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2,000 புதிய பேருந்துகள்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவைக்காக 2,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான பேருந்து பயண அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 2.29 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
18,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரமும், 2 ஆயிரத்து 500 மெகாவாட் புனல் மின்சாரமும், 3 ஆயிரம் மெகாவாட் சூரியமின்சக்தியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.
5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி:
ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில இப்போதும் தொடரும். நிகழ் நிதியாண்டிலும் 5.35 லட்சம் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ஸ்கூட்டர்கள்:
இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லாத ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி உலமாக்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், மீனவ தடைக்காலங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
மதுரையில் புதிய பால் பொருள்கள் தொழிற்சாலை:
தென் மாவட்டங்களில் பால் வளத்தை ஊக்குவிக்க புதிய பால் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை மதுரையில் ரூ.45 கோடியில் அமைக்கப்படும்.
அனைத்துக் காவல் நிலையங்களும் அரசுக் கட்டடங்களில் இயங்குவதை உறுதி செய்யும் நோக்குடன், 64 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். காவல் துறையினரின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்ய நிகழ் நிதியாண்டில் ரூ.422 கோடியில் 2 ஆயிரத்து 673 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விலையில்லாத கறவைப் பசுக்களுக்கான அலகுத் தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்; 12 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு பசுக்களும், ஒரு லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் வெள்ளாடுகள்-செம்மறி ஆடுகளும் அளிக்கப்படும்.
அடுக்குமாடி வீடுகள்:
நிகழ் நிதியாண்டில் 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அரசால் வழங்கப்படும்; நிலம் குறைவாகவும், நிலமதிப்பு அதிகமாகவும் உள்ள இடங்களில் கூட்டுப் பட்டா வழங்கும் புதிய அணுகுமுறை அரசால் கடைப்பிடிக்கப்படும்.
உயர்நிலைக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 7-வது ஊதியக்குழு பரிந்துரையை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.
வீட்டின் கட்டட வடிவமைப்பில் எளிமையான முறை பின்பற்றி, ஊரக வளர்ச்சித் துறை மூலம் கூட்டுப்பட்டா நிலங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.420 கோடி ஒதுக்கி 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவோரின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் குடிமராமத்து முறைக்குப் புத்துயிரூட்டவும், நீர்நிலைகளை மீட்டெடுக்கவும் மாநிலம் தழுவிய இயக்கத்தை அரசு மேற்கொள்ளும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்
* நிகழாண்டில் ரூ.6 ஆயிரம் கோடி புதிய பயிர்க் கடன்கள்
* லோக் ஆயுக்த அமைக்கப்படும்
* மாணவர்களுக்கு 5.25 லட்சம் மடிக்கணினிகள்
* அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ரூ.183.24 கோடி
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.11,514.34 கோடி நிதி
* மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ஸ்கூட்டர்கள்
* உலமாக்கள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு
* 2,000 பேருந்துகள் வாங்க ரூ.275 கோடி
* மதுரையில் பால் பொருள்கள் தயாரிக்க புதிய தொழிற்சாலை
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக உயர்வு
* தமிழ்நாடு தொழில் கூட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி
* சாலைப் பாதுகாப்புக்கென ரூ.150 கோடி நிதி
* பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள்
* 18,500 மெகாவாட் கூடுதல் மின்னுற்பத்தித் திட்டம்
 

Wednesday 20 July 2016

உயர் மருத்துவப் படிப்புகள்: ஜூலை 26-இல் கலந்தாய்வு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மூன்றாண்டு டி.எம்., எம்.சிஎச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு தமிழகத்தில் 189 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு அட்டவணை, தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org  என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), சென்னை ஓமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும்.
காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, 4 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை, ஜூலை 22-ஆம் தேதி முதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tuesday 19 July 2016

மாவட்டம் முழுவதும் பல்வேறு பணிகள் பாதிப்பு


திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின்விநியோகம் இல்லாததால் அரசு அலுவல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன. இத்துடன் அரசு அலுவல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின்தடையால் ஏடிஎம் மையங்கள் இயங்காததால் பணம் எடுக்க முடியாமல் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் எந்தப் பணிகளும் செய்ய முடியாமல் பாதித்தனர்.
மின்விநியோக தடை குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மின்வாரிய அலுவலகம் பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் தகவல் தெரியப்படுத்தியிருந்தால் மக்கள் முன்னெச்சரிக்கையாக சில செயல்கள் செய்திருக்க முடியும். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பராமரிப்புப்பணி இருப்பதால் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கூறினர். இருப்பினும் இரவு 8.30 மணி வரை மின்விநியோகம் இல்லை.
பகல் நேரத்தில் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றாலும் இரவு நேரத்தில் மின்விநியோகம் இல்லாததால் சாலைகள், தெருக்கள் மற்றும் நகரம் முழுவதும் இருட்டில் மூழ்கியது.
இனி வரும் நாள்களில் இதுபோன்ற மின்விநியோக நிறுத்தம் இருந்தால் மின்சாரத்துறை அலுவலர்கள் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.

Monday 18 July 2016

முழுவீச்சில் "ஆதார்' பதிவு!


தமிழகத்தில் ஆதார் அட்டையைப் பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில், கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றின் அடிப்படையில் 87.53 சதவீதம் பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அவை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் இப்போது ஆதார் எண் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு மானியம் பெறுவது, ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பணப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்துத் தரப்பினரிடமும் ஆதார் எண்ணைப் பெற அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணைப் பெற முதலில் நமது அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்கள், பாரத மிகுமின் நிறுவனத்தின் கணினி சேமிப்புப் பிரிவில் சேகரித்து வைக்கப்படும்.
பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்லிடப்பேசி எண், கருவிழி, கைவிரல் ரேகைகள் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பயோ- மெட்ரிக் எண் வழங்கப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் சில வாரங்களுக்குப் பிறகு, ஆதார் எண் கிடைக்கும்.
95.32 சதவீதப் பதிவு: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து ஆதார் எண்ணைப் பெறுவதற்காக 95.32 சதவீதம் பேர் தங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவல்களைப் பதிவு செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி மையம் செயல்பட்டு வருகிறது.
அடிப்படைத் தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இதுவரை (ஜூலை 6 ஆம் தேதி நிலவரம்) 87.53 பேருக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 94.52 சதவீதம் பேருக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு, 101.19 சதவீதம் பேரின் அடிப்படைத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
100 சதவீதத்தைத் தாண்டியது: பெரம்பலூர் (111.89), புதுக்கோட்டை (101.15), தேனி (100.53), சென்னை (103.31) ஆகிய மாவட்டங்களில் ஆதாருக்கான பதிவு 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இணை இயக்குநர் கிருஷ்ணாராவ் கூறியது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மக்கள் தொகையின் அளவு கணிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகருக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடிபெயரும்போது அவர்கள் ஆதார் எண்ணைப் பெற விண்ணப்பம் செய்வார்கள். இதனால், அந்தக் குறிப்பிட்ட மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையைவிட ஆதார் பதிவுக்கான எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த அடிப்படையிலேயே, சென்னை, தேனி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் ஆதார் பதிவுக்கான எண்ணிக்கை 100 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது என்றார் அவர்.
மக்கள் தொகை எவ்வளவு: தமிழகத்தில் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்தம் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் உள்ளனர். இவர்களில், 6 கோடியே 87 லட்சத்து 70 ஆயிரத்து 780 பேர் ஆதார் எண் பெற பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில், 6 கோடியே 31 லட்சத்து 53 ஆயிரத்து 86 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகக் கணக்கெடுப்பு தீவிரம்: ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள சூழலில், அவர்களின் அடிப்படை விவரங்களைச் சரிபார்க்கும் பணிகளும் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஒவ்வொருவருக்கும் ஆதார் விவரங்கள் அடங்கிய தனித்தனிப் படிவங்கள் தொகுக்கப்படுகின்றன. இந்தப் படிவங்களை வீடு வீடாக எடுத்துச் செல்லும் பணியில் ஆசிரியர்களும், வருவாய்த் துறை அலுவலர்களும், மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணா ராவ் கூறியதாவது: ஆதார் எண் பெறும் போது அளித்த அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் சரியானனவையா, தற்போது அதில் ஏதும் மாற்றம் இருக்கிறதா போன்ற அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன.
இந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகு ஆதார் அட்டையை எந்த வடிவத்தில் வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்யும். இப்போது ஆதார் எண் வழங்கும் போது அது ஒரு காகிதத்தில் மட்டும் அச்சிடப்பட்டு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இணைய சேவை மையங்களில் வழங்கும் பிளாஸ்டிக் அட்டைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் அதுவே இறுதியானது அல்ல.
ஆதார் எண்ணில் தெரிவித்த அடிப்படை விவரங்கள் அனைத்தும் வீடு வீடாகச் சரிபார்க்கப்பட்டு அந்த இறுதித் தகவல்களைக் கொண்டு ஆதார் அட்டை வடிவமைக்கப்படும். ஆனால், யாருக்கும் ஆதார் எண் மாறாது. இதன்மூலம், ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உறுதியானதாக இருக்கும் என்றார் அவர்.
அக்டோபரில் இருந்து மாற்றம்: தமிழகத்தைப் பொருத்தவரை, ஆதார் எண்ணை வழங்கும் பணியை பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) கணினிப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழக அரசே எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்வதற்கான பூர்வாகங்கப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.



அடைமொழிச் சொல்லை சேர்க்கக் கூடாது

ஆதார் எண்ணுக்காக பயோ- மெட்ரிக் விவரங்களைப் பதிவு செய்யும் போது சில குறிப்பிட்ட முன்சேர்க்கை, பின்சேர்க்கை பெயர் விவரங்களைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் ஆதார் எண் கிடைக்காமல் நிராகரிக்கப்படும் என்று தேசிய மக்கள் பதிவேடு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆதார் எண்ணுக்காக நமது அடிப்படை விவரங்களை கணினியில் பதிவு செய்யும் போது, திரு, டாக்டர், ஐ.ஏ.எஸ்., என்கிற ஆகிய சொல்கள் இடம் பெறக் கூடாது. இத்தகைய அடைமொழிச் சொல்களை கணினியில் உள்ளீடு செய்தால் ஆதார் எண் வழங்கப்படாமல் நிராகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், திரு, டாக்டர், ஐ.ஏ.எஸ். ஆகியன அடைமொழிகளாக இருந்தாலும், கணினியைப் பொருத்தவரை அவற்றை ஒரு பெயராகவே ஏற்றுக் கொள்ளும்.
இதனுடன் உங்களது அசல் பெயரைச் சேர்க்கும் போது, அவற்றை இரண்டு பெயர்களாக கணினி ஏற்கும். இதனால், போலி எனக் கருதி நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, நமது பெயரை மட்டும் பதிவு செய்வது நல்லது.
விவரங்களைத் திருத்த...: ஆதார் எண் நமக்குக் கிடைத்த பிறகு, அதிலுள்ள முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்களை மாற்றம் செய்ய நினைத்தால் நாமே அதைச் செய்யலாம். ஆதார் விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதற்கு முன்பாக தகுந்த ஆவணத்தின் நகலில் கையெழுத்திட்டு, அதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாருக்குரிய இணையதளத்தில் சென்று விவரங்களைத் திருத்தி, அதற்குரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்துவிட்டால், குறைந்தபட்சம் 5 முதல் 7 வேலை நாள்களுக்குள் திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கிடைத்து விடும் என்றனர் அதிகாரிகள்.


மாவட்ட வாரியாக எவ்வளவு?
ஜூலை முதல் வாரம் வரையிலான நிலவரம்

 மாவட்டம்   பயோ- மெட்ரிக் பதிவு ஆதார் எண் பெற்றோர் (சதவீதத்தில்)
1. அரியலூர் 101.19 94.52
2. தருமபுரி 100.40 92.27
3. திருநெல்வேலி 99.75 92.17
4. விருதுநகர் 94.26 91.99
5. திருச்சி 97.05 91.83
6. பெரம்பலூர் 111.89 91.56
7. மதுரை 93.89 91.09
8. கன்னியாகுமரி 93.04 90.91
9. திருவள்ளூர் 91.03 90.84
10. ஈரோடு 98.19 90.14
11. சேலம் 97.24 89.88
12. கரூர் 95.80 89.76
13. புதுக்கோட்டை 101.15 89.24
14. காஞ்சிபுரம் 89.94 89.25
15. தேனி 100.53 89.13
16. தூத்துக்குடி 99.02 89.18
17. நாகப்பட்டினம் 90.73 88.13
18. திண்டுக்கல் 93.40 87.48
19. வேலூர் 93.60 87.42
20. கடலூர் 92.64 86.89
21. நீலகிரி 98.11 86.81
22. கோவை 92.69 86.80
23. திருவாரூர் 90.04 86.73
24. சிவகங்கை 95.41 86.36
25. நாமக்கல் 93.30 86.19
26. திருவண்ணாமலை 98.18 85.92
27. தஞ்சாவூர் 93.17 85.40
28. விழுப்புரம் 90.46 85.10
29. கிருஷ்ணகிரி 96.00 83.19
30. ராமநாதபுரம் 95.44 78.58
31. திருப்பூர் 91.7 78.84
32. சென்னை 103.31 78.71
மொத்தம் 95.32 87.53

Sunday 17 July 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 17/07/2016

நமதூர் மேலத்தெரு (காட்டுப்பள்ளி தெரு ) ஜெகபர் அவர்களின் மருமகனும் ,அன்சாரி அவர்களின் மச்சானுமாகிய அஹ்மது கபீர் அவர்கள் மௌத் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 110 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எம். மதிவாணன் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபால் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 70 பேருக்கு சுயதொழிலுக்கான வங்கிக்கடன் மானியத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சத்துக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் காமராஜ் பேசியதாவது: சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் தேவை மற்றும் மாற்றுத்திறனின் தன்மைக்கு ஏற்ப தேசிய அடையாள அட்டை, முடநீக்கு சாதனம், செயற்கை கால், நவீன செயற்கை கால், மூன்றுசக்கர வண்டி, மோட்டர் பொருந்திய தையல் இயந்திரம் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வி பயிலும் மாணவ,மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிய விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் முதல் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ரூ.50 ஆயிரம் வரை மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இலவச பேருந்து வசதி போன்ற உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் காமராஜ்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் டி.மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர். முத்துமீனாட்சி (திருவாரூர்), ஏ செல்வசுரபி (மன்னார்குடி), நகர்மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday 16 July 2016

திருவாரூர் :எஸ்எஸ்எல்சி படித்த பள்ளியில் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்


எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 18-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மாணவாóகள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவாõ ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு எடுத்து சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
ஜூலை 18 முதல் ஆக.1-ஆம் தேதி வரை படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லத்தேவையில்லை.
ஜூலை 18 முதல் 15 நாள்களுக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண் வழங்கும் ஜூலை 18-ஆம் தேதி பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும். எனவே மாணவாóகள் எவ்வித பதற்றமின்றி, பொறுமையாக பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Friday 15 July 2016

திருவாரூர் :குடியிருப்பு வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி: தடுத்து நிறுத்திய கிராம பொது மக்கள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அனல்மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்ல குடியிருப்பு பகுதி வழியாக பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை எதிர்த்து கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து குழாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.
மத்திய அரசுக்கு சொந்தமான ஒஎன்சிஜி நிறுவனம் களப்பாலில் உள்ளது. இங்கிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ள திருமக்கோட்டை அனல்மின் நிலையத்திற்கு மின் உற்பத்தி செய்யத் தேவையான எரிவாயு பூமிக்கடியில் குழாய் பதித்து அதன் வழியாக எரிவாயு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
தற்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு அதிகளவில் எரிவாயு தேவைப்படுவதை அடுத்து, கூடுதலாக பூமிக்கடியில் குழாய் அமைக்கும் பணியை தனியார் நிறுவனமான கெயிலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் ஏழு கி.மீ. தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்ட நிலையில், மான்கோட்டைநத்தம் உள்ளிட்ட சில கிராமங்களில் குழாயினை அமைக்க குடியிருப்பு பகுதி அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஓரிடத்தில் இரண்டு வீட்டிற்கும் இடையில் குழாய் அமைப்பதற்காக ஒப்பந்தப்பணி எடுத்த தனியார் நிறுவனம் அளவீடு செய்து குறியீடுகளைப் போட்டு சென்றுள்ளனர். மான்கோட்டைநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை குழாய் அமைக்கும் பணியை தொடங்குவதாக இருந்தனர்.
இதனை அடுத்து எரிவாயு குழாயில் விரிசல் ஏற்பட்டு தீவிபத்து நிகழ்வுகள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும், திருமக்கோட்டை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் நீர் எடுக்கப்படுவதால் திருமக்கோட்டை சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, புதிதாக குழாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும், அனல் மின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம பொதுமக்கள் குழாய் அமைக்கும் பணிக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரத்தை மறித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன் தலைமை வகித்தார்.
மாநில தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செ.பாண்டியன், கிராம நிர்வாகிகள் பூபாலன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஒப்பந்ததாரர் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Thursday 14 July 2016

திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம்

திருவாரூரில் தாங்கள் வருவதற்கு முன்பே நகராட்சி கூட்டம் முடிவுற்றதற்கு திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்க திமுக உறுப்பினர்கள் காலை வந்தனர். அப்போது கூட்டம் நடக்கும் அரங்கம் பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டதற்கு கூட்டம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திமுக தலைவர் மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றமைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நகராட்சி கூட்டத் தில் நிறைவேற்ற வேண்டும் என்று தாங்கள் கடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்தோம். அதற்கு அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றலாம் என்று நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Wednesday 13 July 2016

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி

மத்திய அமைச்சரவை கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டநிலையில் 2 மத்தியமைச்சர்கள் இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளனர்.அதன்படி மத்திய அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா , மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சர் சித்தேஷ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.அவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளார். கனரக தொழில் துறை அமைச்சராக பபுல் சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday 12 July 2016

கொள்ளையடிக்க திட்டமிட்ட 3 பேர் கைது

திருவாரூரில் கூட்டாக கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் ஞாயி ற்றுக்கிழமை கிடாரங்கொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாரியம்மன் கோவில் தெரு வளைவு அருகில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது அனைவரும் தப்பிக்க முயன்ற நிலையில் போலீஸார் 3 பேரை பிடித்தனர். 2 பேர் தப்பியோடினர்.
 விசாரணையில் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி செட்டி தெருவைச் சேர்ந்த ஜான் ரவீந்திரன் மகன் அருள்மணி (19), நாகை கட்டியார் தெரு சீனுவாசன் மகன் மஞ்சுநாதன் (20), பழுர் சேவியர் மகன் வினோத் ஆரோக்கியராஜ் என்பதும், பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்து தெரியவந்துள்ளது.
 இதையடுத்து போலீஸார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து உருட்டு கட்டை, மிளகாய்த்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அருள்மணி, மஞ்சுநாதன், ஆரோக்கியராஜை கைது செய்து தப்பியோடிய தமிழரசன், ஹாரிஸ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Monday 11 July 2016

தமிழகத்துக்கு 1,125 மெகாவாட் மின்சாரம்


கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரு உலைகளில் இருந்து தமிழகத்துக்கு 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடைய இரு அலகுகள் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் மத்திய மின் அமைச்சகத்தால் தென் மின்சார பிராந்தியத்தின் பயனாளி மாநிலங்களுக்கு மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு 562.50 மெகாவாட், ஆந்திர பிரதேசத்துக்கு 50 மெகாவாட், கர்நாடகத்துக்கு 221 மெகாவாட், கேரளத்துக்கு 133 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரு உலைகளில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இதேபோன்று, கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் கொள்திறனுடைய கூடுதலாக இரண்டு (அலகு 3, 4) அணு உலைகளை ரஷிய உதவியுடன் அமைப்பதற்கு மத்திய அரசு நிர்வாக அனுமதியையும், நிதி அனுமதியையும் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த உலைகளும் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகத்துக்கு கூடுதலாக 1,125 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 10 July 2016

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வங்கிக் கணக்கு எண், ஆதார் எண்ணுடன் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday 9 July 2016

ஆதார் எண் தராவிட்டால்சமையல் எரிவாயு மானியம் நிறுத்தம்: எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு மானியத் தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.), ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (எச்பிசிஎல்), பாரத் பெட்ரோலிய நிறுவனம் (பிபிசிஎல்) ஆகியவை சமையல் எரிவாயு மானியத் தொகையை நிறுத்தி வைக்கும் இந்த அதிரடி நடவடிக்கையை ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.
குறுந்தகவல் சேவை மூலம்...: இது குறித்து எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் நுகர்வோரின் செல்லிடப்பேசியில் குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ""தாங்கள் ஆதார் எண்ணை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்காமல் இருப்பதால், சமையல் எரிவாயுக்கான மானியத் தொகை நிறுத்தி வைக்கப்படுகிறது. மானியத் தொகையை தங்களது வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்த தங்களது ஆதார் எண்ணை உடனடியாகச் சமர்ப்பிக்கவும்'' என்று குறுந்தகவல் சேவை அனுப்பப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்டத் தலைவர் சி.பால் பர்னாபஸ் ஆகியோர் கூறியதாவது:
""சமையல் எரிவாயு மானியத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால் மானியத் தொகை நிறுத்தி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் குறுந்தகவல் அனுப்புவது கடும் கண்டனத்துக்குரியது.
ஆதார் எண் பெறுவதில் பிரச்னைகள்: ஏனெனில் ஆதார் எண்ணைப் பெறுவதில் சமையல் எரிவாயு நுகர்வோருக்குப் பல பிரச்னைகள் உள்ளன. ஆதார் அட்டை (எண்) பெற ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளோருக்கு அவர்களது செல்லிடப்பேசியில் தகவல் வரும் நிலையில், பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் இருக்க வேண்டியது அவசியம்; மேலும் ஆதார் அட்டைக்கு மனு செய்தோர் செல்லிடப்பேசி எண்ணை மாற்றியிருந்தாலும் பிரச்னைதான்.
மேலும் லட்சக்கணக்கானோர் இன்னும் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்காத நிலை நீடிக்கிறது. ஆதார் எண் பெற்றவர்களில் பலர், அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்து வங்கியிலும் சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும் இன்னும் அளிக்காத நிலையும் உள்ளது.
நிறுத்திவைப்பு கூடாது : ஆதார் எண்ணைப் பெறுவதில் இன்னும் பிரச்னை நீடிப்பதால் சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணைப் பெற்று வங்கியில் இணைக்கும் வரை மானியத் தொகையை நிறுத்திவைக்கக் கூடாது. சமையல் எரிவாயு மானியத் தொகை நிறுத்திவைப்பு குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) அனுப்புவதை இனி தொடராமல், வங்கிக் கணக்கை அளித்திருக்கும் நுகர்வோருக்கு மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் அளிப்பது அவசியம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 30 வரை கெடு
சமையல் எரிவாயு மானியத் தொகையைப் பெற எரிவாயு விநியோகஸ்தர், வங்கியில் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.
ஜூலை 1-ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்துவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி, ஆதார் எண்ணை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) அனுப்பி வருகின்றன.
வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கும் நுகர்வோருக்கு, அவர்கள் பெற்ற சமையல் எரிவாயு உருளைகளுக்கு உரிய மானியத் தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால், சமையல் எரிவாயு மானியத் தொகை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Thursday 7 July 2016

உலகம் முழுவதும் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்

மலேசியா சிங்கப்பூர் அரபு நாடுகள் உள்ளட்ட நாடுகளில் ஈத் பெருநாள் 6/6/2016 அன்று கொண்டாட்டப்பட்டது .

Tuesday 5 July 2016

ரயில் முன்பதிவு மையம் செயல்படாததால் பயணிகள் ஏமாற்றம்

திருவாரூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பயணத்துக்கான முன் பதிவு மையம் செயல்படாததால் ரயில் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
ரயில்வேதுறையில் பயணிகளின் நலனுக்காக முன்பதிவு செய்து பயணம் செய்யும் சேவை யை செய்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வசதி மற்றும் வளர்ச்சி காரணமாக ரயில்வேதுறை தனது சேவையை நவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு சேவைகளின் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு விழா நாளிலிருந்து 120 நாளுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.
 அந்த வகையில் நிகழாண்டு அக்.29-ம் தேதி தீபாவளி பண்டிகை நாளையொட்டி ரயிலில் பயணிக்க தீபாவளிக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ஜூன் 29-ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை நாடுமுழுவதும் கடந்த ஜூன் 29-ம் தேதி அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. ஆனால் திருவாரூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பயணத்துக்காக முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு நேரமான காலை 8 மணியை கடந்தும் ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடங்கவில்லை.
 வரிசையில் நின்ற பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் கேட்ட போது, பயணச்சீட்டு கொடுக்கும் பிரிண்டர் இயந்திரம் பழுந்தடைந்துள்ளது, அதனால் முன்பதிவு செய்ய இயலாது எனக் கூறியதுடன், ஓர் அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர். பிறகு பயணிகள் ரயில்வே ஊழியர்களிடம் விவாதம் செய்தபோது காலை 8.45 மணியளவில் பிரிண்டர் இயந்திரம் கொண்டு வந்து வைத்துள்ளனர்.
அந்த நேரம் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ரயில் பயணிகள் தீபாவளி பயணத்துக்கு முன்பதிவு செய்ய இயலாமல் தவித்து புலம்பிக்கொண்டு காத்திருப்பு பட்டியலில் பயணச்சீட்டு பெற்று திரும்பினர்.
 தீபாவளி பண்டிக்கைக்கு செல்ல முன்பதிவு நிலைமை இப்படியென்றால், விழா முடிந்து 31.10.2016 அன்று திரும்பிச்செல்ல முன்பதிவு செய்யவும் முடியாமல் தவித்த நிகழ்வும் நடந்தது. அதாவது 31.10.2016 அன்றைய பயணத்துக்கான முன்பதிவு 3.7.2016 அன்று செய்ய வேண்டும். கடந்த 29-ம் தேதி நிகந்த நிகழ்வை போல் ஞாயிற்றுக்கிழமையும் திருவாரூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காலை 8 மணி யிலிருந்து 8.30 மணி வரை ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் மற்றும் பேருந்து பயணிகள் நலச்சங்க தலைவர் ஆர். தெட்சிணாமூர்த்தி கூறியது: திருவாரூர் ரயில்வே முன்பதிவு நிலைய மையத்தில் இதேபோல் நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது.
எனவே இக்குறையை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்று சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளோம். மேலும் இதுகுறித்து புகார் மனுவை, சங்க நிர்வாகிகள் பூங்குன்றன், தியாகராஜன், சித்தார்த்தன் உள்ளிட்டோருடன் சென்று திருவாரூர் ரயில் நிலைய மேலாளரிடம் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.

Monday 4 July 2016

விடைபெறும் ரமலான்.

ரம்மிய ரமழானே நீ  விடை பெறுகின்றாயா....

எங்களை விட்டும் நீ செல்கின்றாயா......

உன்னை வழியனுப்பும் தருவாயில் உள்ளோம் ரமழானே..........

மனம் மறுக்கிறது ரமழானே......

கண்கள் கண்ணீர் வடிக்கிறது ரமழானே.......

இதயம் பிடைகிறது ரமழானே.......

உன்னை வழியனுப்ப.....

மனமில்லை ரமழானே உன்னை வழியனுப்ப.....

அனைவருக்கும் வசந்தமாய் அல்லவா நீ வந்தாய்......

சிறப்பு மிக்க விருந்தாளியாய் அல்லவா நீ வந்தாய்........

எத்தனை எத்தனை மகிழ்ச்சியை நீ தந்தாய் தெரியுமா........

எவ்வளவு ஒற்றுமையை நீ  தந்தாய் தெரியுமா.......

உன் வரவால் ஒரு தாய் பெற்ற மக்களை போன்று நாங்கள் ஆனோம் ரமழானே......

உன் வரவால் மஸ்ஜிதுகளெல்லாம் அலங்கரிக்கப்பட்டது ரமழானே.....

உன் வரவால் மஸ்ஜிதுகளெல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது ரமழானே.....

உன் வரவால் ஏழை எளிய மக்கள் ஆனந்தத்தால் மகிழ்ச்சியினால் கண்ணீர் வடித்தார்கள் ரமழானே.....

உன் வரவால் இந்த சமுதாயம் எத்தனை எத்தனை கோடிகளை செலவழித்தார்கள் என்று உனக்கு தெரியுமா ரமழானே......

புண்ணிய மிக்க ரமழானே......

யாராவது பசித்திருப்பதை விரும்புவார்களா......

உன் வரவால் நாங்கள் பசித்திருந்தோம் ரமழானே.......

புனித ரமழானே.....

உண்ணுவதற்க்கு உணவு இல்லாத்தினால் கிடையாது ரமழானே........

குடிப்பதற்க்கு தண்ணீரோ பானியங்களோ இல்லாமலிருந்ததினால் கிடையாது ரமழானே....

உன்னை கண்ணியப்படுத்த வேண்டும்.....

உன்னை சங்கை செய்ய வேண்டும்......

என்ற ஒரே காரணத்தினால் ரமழானே......

கை விட்டு விடாதே ரமழானே...

கை விட்டு விடாதே
ரமழானே.....

ஒரு போதும் இந்த பாவிகளை கை விட்டு விடாதே ரமழானே......

உன்னை கண்ணியப்படுத்துவதில் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் .........

மன்னித்து விடு ரமழானே......

மன்னித்து விடு
ரமழானே......

நாளை மறுமையில்
மஹ்ஷர் பெருவழியில்
பயந்து நடுங்கி நிற்க்கும் வேளையில்.......

இந்த பாவிகளான எங்களுக்கு......

பரிந்துரை செய்
ரமழானே......

பரிந்துரை செய்
ரமழானே........

😭😭😭😭😭😭😭
  ஒன்று மட்டும்
எங்களுக்கு தெரியும் ரமழானே........

அடுத்த வருடம் நிச்சயமாக நீ வருவாய்.......

உன்னை வரவேற்க்க நாங்கள் இருப்போமா ரமழானே......

காரணம்.......

சென்ற வருடம் நீ வந்தபோது எங்களுடன் இருந்து உன்னை வரவேற்ற.....

நாங்கள் உயிராய் நேசித்த பலரையும் இன்று இழந்து தவிக்கின்றோம் ரமழானே........

அந்த மண்ணறை வாழ் மக்களுக்கும் பரிந்துரை செய் ரமழானே.......
😭😭😭😭😭😭😭

ரம்மிய ரமழானே
நீ விடை பெறுகின்றாயா.....
😭😭😭😭😭😭

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ர ரமழான்.....

அஸ்ஸலாமு அலைக்க யா ஷஹ்ரல் முபாரக்..........
🕋🕋🕋🕋🕋🕋🕋

உன்னை பிரிய மனமில்லாமல்.....

அடங்கா கண்ணீருடன்.....

Sunday 3 July 2016

ரமலான் 27வது இரவு சிறப்பு நிகழ்வுகள்

 
புனித ரமலான் பிறை 27வது இரவு 02/07/2016 அன்று நமதூர் முஹையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வுகள் 





Saturday 2 July 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 2/7/2016

கடிகாரக்கார வீட்டு சின்ன ராஜா அவர்கள் மௌத்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மானியமில்லா எல்பிஜி விலை ரூ.11 குறைப்பு


மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் (எல்பிஜி) விலை வெள்ளிக்கிழமை ரூ.11 குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதன்பிறகு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகள், சந்தை விலையில் அளிக்கப்படுகின்றன. இந்த மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை ரூ.11 குறைத்துள்ளன.
இந்த விலை குறைப்பின்படி, தில்லியில் 14 கிலோ எடை கொண்ட மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ. 537.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், விமான எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5.47 சதவீதம் வெள்ளிக்கிழமை உயர்த்தியுள்ளன. இதன்படி, தில்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 2,557 அதிகரித்து, ரூ.49,287-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு, உயர்வு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
முன்னதாக, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசலின் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன என்பது குறிப்பிடத்தக்

Friday 1 July 2016

புதிய தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதிய தொழில் முனை வோராக வரவிரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
 இத்திட்டத்தின்கீழ் இளங்கலை, முதநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்பவர் தேர்வு செய்து ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படுகிறது.
 பிறகு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.
 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன் ஐடிஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 21-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45. பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.
 திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக  திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத செலுத்த வேண்டும்.
 ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
 தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தேர்வுக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் விளமலில் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை அணுகலாம். அல்லது w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌ i‌n‌n‌e‌e‌d​‌s‌o‌n‌l‌i‌n‌e​ என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.