Thursday 30 March 2017

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 30/03/2017

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
புதுமனை தெரு
மர்ஹும் கோ.மு.முஹம்மத்
அவர்களின் மனைவியும்,
Dr.M..சிராஜுதீன்
M.ஹாஜா மெய்தீன்
M.அப்துல் கஃபூர் இவர்களின் தாயாருமாகிய
மஹபூபா பீவி அவர்கள்
லண்டனில் மெளத்.

ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்

ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்பட்டைதாரர்கள்ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-

பழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1-ந்தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ந்தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ந்தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும்.



அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.

மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரே‌ஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


Tuesday 28 March 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டி; எந்திர வாக்குப்பதிவு நடத்தப்படும்

 தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16–ந் தேதி தொடங்கி 23–ந் தேதி வரை நடந்தது.
127 மனுக்கள்
இதில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் இ.மதுசூதனன், அ.தி.மு.க. (அம்மா) சார்பில் டி.டி.வி.தினகரன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜனதா சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா, தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லோகநாதன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அந்தோணி சேவியர், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டூதயம் ஆகியோர் கட்சிகள் சார்பில் போட்டியிட மனு அளித்தனர்.
இதுதவிர சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
8 வேட்பாளர்கள் வாபஸ்
கடந்த 24–ந் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இந்த பரிசீலனையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை முறையாக பின்பற்றாமல் தாக்கல் செய்யப்பட்ட 45 மனுக்கள் தள்ளுபடி ஆனது. இதில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் மனுவும் அடங்கும். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 70 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று, கொளஞ்சி, சண்முகம், கலைவாணன், அக்னி ராமச்சந்திரன், தமிழரசன், லோகநாதன், ஆர்.எஸ்.ராஜேஷ், மன்மதன் ஆகிய 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்தது.
சின்னங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்திருப்பதால் அ.தி.மு.க. (அம்மா) வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சுயேச்சையாகவே மனுதாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு திராட்சை கொத்து, பேனா, படகு ஆகிய 3 சின்னங்களில் படகு ஒதுக்கப்பட்டது. இதேபோல் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாராவதற்கு முன்பு 70 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுமா? அல்லது வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் வேட்பாளர்கள் எண்ணிக்கை 63 வரை இருந்தால் மட்டுமே ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தமுடியும். அதாவது வாக்குகள் பதிவாகும் கட்டுப்பாட்டு எந்திரம் ஒன்றுடன் 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே இணைக்க முடியும்.
ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை இடம்பெறும். இவ்வாறு 4 வாக்குப்பதிவு எந்திரங்களும் சேர்த்தால் 64 எண்ணிக்கை வரும். இதில் 63 எண்ணிக்கைகள் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களுக்கு ஒதுக்கப்படும். ஒரு இடம் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) ஒதுக்கப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 8 சுயேச்சை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக வேட்பாளர்கள்
கடந்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா உள்பட 45 பேர் களத்தில் இருந்தனர். தற்போது 17 வேட்பாளர்கள் அதிகரித்து, 62 பேர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 18 March 2017

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி


சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தமிழகம் முழுவதும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அழிக்க உத்தரவிட்டது. அதன் பேரில் தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் பார்த்திபன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Wednesday 15 March 2017

திருவாரூர் அருகே புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்குழாய் அமைத்து எண்ணெய், கியாஸ் எடுத்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கீழப்படுகை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பூமியில் ஆழ்குழாய் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய்யை எடுத்து வருகிறது. இந்த இடத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிட்டு லாரிகள் மூலம் கருவிகள், ரசாயனங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், கிளை பொறுப்பாளர் சிவக்குமார், ராஜி, அபுசாலி, பாலமுருகன், இளம்பருதி, ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி படுகையை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

50 பேர் கைது

தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் எந்தவித புதிய பணிகளும் தொடங்கப்படவில்லை என தெரிவித்தனர். இந்த பிரச்சினையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Monday 13 March 2017

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், வேளுக்குடி, சித்தனங்குடி, பூதமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதேபோல ஆறுகளில் தேங்கி கிடந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பம்பு செட் மூலம் பாய்ச்சி விட்டதால் ஆறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும் விவசாய நிலங் களும் வறண்டு காட்சி அளிக் கிறது. இதனால் புற்கள் கருகி இருப்பதால், கால்நடைகளும் மேய்ச்சலின்றி சிரமப் படுகின்றன. கால்நடைகளுக்கான வைக்கோல் கூட இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

இதுபோன்ற நிலை ஏற்படுவதற்கு பருவ மழை பொய்த்து போனதுதான் காரணம் என்றாலும், தண்ணீர் கிடைக்கின்றபோது அதை முறையாக பராமரித்து பாதுகாத்து வைக்காததும் ஒரு காரணம். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளதால் கூத்தாநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday 11 March 2017

5 மாநிலங்களின் தேர்தல் முடிவு

5 மாநிலங்களின் நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் உத்திரப்பிரதேசம் ,உத்தரக்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாவும்,பஞ்சாப்பில் காங்கிரஸூம் அமோக வெற்றி பெற்றுள்ளன. மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போதைய முதலமைச்சர்கள்  அகிலோஷ் யாதவ் (உ.பி),ஹாரீஷ் ராவத் (உத்திரக்கண்ட்) ,லஷ்மிகாந்த் பாரிஸ்கார் (கோவா) ஆகியோர்கள் தோல்வி அடைந்தனார். பிரகாஷ் சிங் பாதல்( பஞ்சாப்) இபோபி சிங் (மணிப்பூர்) இருவரும் வெற்றி அடைந்தனார்.

Thursday 9 March 2017

திருவாரூர் அருகே உள்ள கேக்கரையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கேக்கரையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்வதாக தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் அங்கு நடைபெற்று வந்த பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு நிலம், நீர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், தி.மு.க. நகர செயலாளர் வாரைபிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக பணிகள் மேற்கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வரதராஜன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

3 மக்களவை தொகுதிகள், 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்


ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முறையே ஏப்ரல் 9,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  கேரளாவில் மலப்புரம் மக்களைவை தொகுதி எம்.பியாக இருந்த ஈ அகமது பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து மலப்புரம் தொகுதி காலியானது. இந்த மக்களவைதொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தனது மக்களை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டார். இதனால், மெகபூபா முப்தி மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அனந்த்நாக் தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி ஸ்ரீநகர் மக்களவை தொகுதி எம்.பி ஹமீத் கரா தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனால், காலியான ஸ்ரீநகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 


இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளின் விவரம் வருமாறு:- தேமாஜி (அஸ்ஸாம்), போராஞ்ச் (இமாச்சல பிரதேசம்), பந்தவார்க்(மத்திய பிரதேசம்),காந்தி தஷ்கின்(மேற்கு வங்காளம்), தோல்பூர்(ராஜஸ்தான்), நாஞ்சான்குட், குண்டல்பேட்( கர்நாடாகா) , லிதிபாரா(ஜார்கண்ட்), அப்பர் புர்டக்(சிக்கிம்), ஆர்.கே நகர் (தமிழ்நாடு) ராஜவுரி கார்டன்( டெல்லி)

Saturday 4 March 2017

திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 680 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 110 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 126 மாணவர்கள், 8 ஆயிரத்து 554 மாணவிகள் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 680 மாணவர்கள் தேர்வு எழுதினர். திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வதி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 42 மையங் களில் நடக்கிறது. இதில் 67 அரசு பள்ளிகளை சேர்ந்த 7,806 பேர், 3 ஆதிதிராவிட பள்ளிகளை சேர்ந்த 295 பேர், 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 5,043 பேர், 24 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 1,536 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் தமிழ் வழியில் 12,068 மாணவர்கள், ஆங்கில வழியில் 2612 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், கழிவறை, தடையின்றி மின்சார வசதியும் செய்யப்பட்டது. தேர்வு மையங்களை கண்காணிக்க 7 பறக்கும் படைகள், 840 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர். காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களை தடுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Thursday 2 March 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 2 /3/2017

" இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் "

கொடிக்கால்பாளையம்  வடக்குத்தெரு  சேனா. இனாயத்துல்லாஹ்  அவர்களின்  மச்சான்    முன்னாள்  நகரமன்ற  உறுப்பினர் நூர்ஜஹான் அவர்களின்  மகனார்  ஜெ. அப்துல்காதர் அவர்கள்  காலமாகிவிட்டார்கள் .

அன்னாரின் ஜனாசா நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும் .

Wednesday 1 March 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் உறுதி: நெடுவாசல் போராட்டக் குழுவினர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
நெடுவாசல் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் போராட்டக் குழுவினர் 10 பேர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேசியதாவது:
''மாநில அரசுகளின் துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என முதல்வர் கூறினார். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் ஆய்வு நிலையில்தான் உள்ளது என்று முதல்வர் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி கூறியுள்ளார். முதல்வர் உறுதியை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் முதல்வரின் உறுதி குறித்து விளக்கப்படும்.
நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்று மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்'' என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.