Monday 16 May 2016

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் சட்டசபை தொகுதியில் 301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடியில் ஒரு தலைமை அலுவலர் உள்பட 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருவாரூர் தொகுதியில் மொத்தம் 1,378 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துமீனாட்சி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நன்னிலம்

அதேபோல நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் நடத்தும் அதிகாரி அசோகன், துணை அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் ஆய்வு செய்தனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேனில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. நன்னிலம் சட்டசபை தொகுதியில் பேரளம், வண்டாம்பாளை, திருமீயச்சூர், கொத்தவாசல், நெடுஞ்சேரி, வடுகக்குடி, குடவாசல் ஆகிய 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

No comments:

Post a Comment