Friday 13 May 2016

விவசாயிகள் கடன் சுமை தீர வழிவகை செய்யப்படும் திருவாரூர் பிரசாரத்தில் கருணாநிதி பேச்சு












தி.மு.க. ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் சுமை தீர வழிவகை செய்யப்படும் என்று திருவாரூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கருணாநிதி பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 2-ம் கட்டமாக தனது சொந்த தொகுதியான திருவாரூரில் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து ரெயில் மூலமாக நேற்று முன்தினம் திருவாரூர் வருகை வந்தார். முதல் நாள் பிரசாரத்தை விளமலில் தொடங்கி பவித்திரமாணிக்கத்தில் நிறைவு செய்தார். 2-வது நாளாக நேற்று மாலை திருவாரூர் பஸ் நிலையத்தில் தனது பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி மக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

ஆழித்தேர்

கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான் திருவாரூர் தொகுதி மக்களின் நன்மை, தீமைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்து இருக்கிறேன். திருவாரூரில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு ரூ.100 கோடி மதிப்பில் அதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டு திருவாரூர் மேம்பாலம் கட்டப்பட்டது. திருவாரூர் கலெக்டர் அலுவலகம் ரூ.6 கோடியே 91 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக வடம் பிடித்து ஓடாமல் கிடப்பில் கிடந்த ஆழித்தேர் பழுதுபார்க்கப்பட்டு ஓடவிட்ட பெருமை தி.மு.க. ஆட்சியை சாரும். இப்படி திருவாரூர் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றிய ஆட்சி தி.மு.க. ஆட்சி. அந்த ஆட்சி மீண்டும் உதயமானால் உங்களுடைய தேவைகளை அறிந்து பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். கடந்த கால அனுபவங்களை எண்ணி பார்த்து தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மண்ணின் மைந்தனான எனக்கு வெற்றியை தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

தள்ளுபடி

இதைத்தொடர்ந்து கருணாநிதி, புலிவலம், வடகரை, கீழமணலி, பூந்தாழங்குடி, கருப்பூர், கமலாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு மலர்தூவியும் பூரணகும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர்.அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சிறு,குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எந்த பாகுபாடும் இன்றி சிறு, குறு விவசாயிகள் மட்டும் இன்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தி.மு.க. ஆட்சி அமைந்தால் விவசாயிகள் பெருவாழ்வு வாழ அவர்களது கடன் சுமை தீர வழிவகை செய்யப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் சாதி வேறுபாடு இன்றி அனைத்து மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி தந்துள்ளோம். வீடு வாழ, நாடு வாழ, விவசாயிகள், தொழிலாளிகள், பாட்டாளி மக்கள் அனைவரும் உங்களது வாக்குகளை வருகிற 16-ந் தேதி உதயசூரியன் சின்னத்தில் அளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment