Tuesday 10 May 2016

வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதிமொழியேற்க வேண்டும்'




திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசு அலுவலர்கள், சமூக சேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதிமொழியேற்க வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான டி.என். வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் சுதந்திரமாக, நேர்மையாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்த உறுதிமொழி மத்திய, மாநில, பொதுத்துறை அலுவலர்கள், நகராட்சிகள், தொழிலாளர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை, வர்த்தகர்கள், மருத்துவர்களின் சங்கங்கள், தெரு நலச் சங்கங்கள், குடிசைவாசிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர், கூட்டுறவு சங்கம், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு பணியாளர்கள், விவசாய சங்கங்கள், ஆலை தொழிலாளர்கள், முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை (மே 10) காலை 10 மணிக்கு உறுதிமொழியெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 50 வாக்காளர்கள் வாக்குச்சாவடி விழிப்புணர்வு குழுக்களுடன் அனைத்து அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாக்காளர்களைக் கொண்டு உறுதிமொழி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment