Sunday 1 May 2016

2,618 வேட்புமனுக்கள் நிராகரிப்பு: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது



சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 2,618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
 இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை (மே 2) மாலை 3 மணியளவில் வெளியாகிறது.
 சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இந்தப் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்காக சனிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டன.
 பார்வையாளர் முன்பு...: 
 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த வேட்புமனு பரிசீலனை வெளி மாநிலங்களைச் சேர்ந்த 122 பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
 முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்னைகள் எழாமல் இருப்பதற்காக, இந்த பார்வையாளர்கள் தீவிரமாக அவற்றை கண்காணித்தனர். 
 மீதமுள்ள தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்பட்டது.
 மொத்தம் எத்தனை? பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 7 ஆயிரத்து 149 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
 அதில், ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 351 மனுக்களும், பெண்கள் சார்பில் 794 மனுக்களும், மூன்றாம் பாலினத்தவர் சார்பில் 4 மனுக்களும் அளிக்கப்பட்டிருந்தன.
 அனைத்து மனுக்களும் சனிக்கிழமை காலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 45 மனுக்களும், திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 16 பேரின் மனுக்களும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 24 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 149 மனுக்களில், 4 ஆயிரத்து 531 மனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 618 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 என்னென்ன காரணங்கள்? வேட்பு
 மனுக்களில் கையெழுத்து இல்லாதது, பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யாமல் இருப்பது, முன்மொழிபவர்கள் இல்லாத நிலை, உறுதிமொழி எடுக்காமல் இருப்பது, வைப்புத் தொகை செலுத்தாமல் மனுதாக்கல் செய்திருப்பது போன்ற காரணங்களால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
 இறுதி வேட்பாளர் பட்டியல்:
 வேட்புமனு பரிசீலனையின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் உள்ளன. 
 மனுக்களை வாபஸ் பெற திங்கள்கிழமை (மே 2) கடைசி நாளாகும். மாலை 3 
 மணிக்குள்ளாக மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
 இதன்பின்பு, தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும். இந்தப் பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும்.
 வாக்காளர்களுக்கு தகவல்: இறுதிப் பட்டியல் தயாரானவுடன், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவற்றின் விவரங்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்பு
 சென்னை, ஏப். 30: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.,
 இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன், பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ், விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 இந்தத் தலைவர்களின் வேட்புமனுக்கள், சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையின் போது, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment