Tuesday 24 May 2016

100 யூனிட் இலவச மின்சாரம், 500 மதுக்கடைகள் மூடல்: பதவியேற்றதும் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா


டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல், 100 யூனிட் கட்டணமில்லாத மின்சாரம், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, தாலிக்கு ஒரு பவுன் தங்கம் உள்பட ஐந்து முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை கையெழுத்திட்டார்.
 முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக பதவியேற்றதும் தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். இதைத் தொடர்ந்து, ஐந்து முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதன் விவரம்:
 கூட்டுறவுக் கடன்கள்: கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து கடந்த மார்ச் 31 வரையில் பெறப்பட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ரூ.5,780 கோடி செலவு ஏற்படும்.
 100 யூனிட் மின்சாரம்: இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,607 கோடி மின் வாரியத்துக்கு மானியமாக அரசு வழங்கும். இந்தச் சலுகை மே 23-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
 ஒரு பவுன் தங்கம்: இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரம் நிதியுதவிடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
 இப்போது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி அனைத்து திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்கென அளிக்கப்படும் தங்கம் 4 கிராமில் இருந்து ஒரு பவுன் (8 கிராம்) என உயர்த்தி கொடுக்கப்படும். இதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 நெசவாளர்களுக்கு மின்சாரம்: கைத்தறி நெசவாளர்களுக்கு இப்போது கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகள் எனவும், விசைத்தறிக்கு அளிக்கப்படும் கட்டணமில்லாத மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் அளிக்கும் கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டார்.
 டாஸ்மாக் மதுபானக் கடைகள்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 வரை செயல்பட்டு வந்தன. 
 செவ்வாய்க்கிழமை முதல் (மே 24) சில்லறை மதுபானக் கடைகள்-பார்கள் அனைத்தும் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும். இதற்கான உத்தரவுகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 

No comments:

Post a Comment