Tuesday 14 April 2015

தமிழக அரசின் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
















2014, 2015-ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறுபவர்கள் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. டாக்டர் சுதா சேசையனுக்கு சொல்லின் செல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுகிறவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் புத்தாண்டு

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி. இத்தகைய பழமையுடைய, இலக்கிய வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக மரபுவழி பெருமை படைத்த சித்திரை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசால் அறிவிக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு முதல் அந்நாள் அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழுக்கு தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் தமிழ் வளர்க்கும் சிறந்த அமைப்பிற்கும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளும் தங்கப்பதக்கங்களும் வழங்குவதென அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

2014-ம் ஆண்டு விருதுகள்

2014-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். 2014-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர் விருது-

அ.லலிதா சுந்தரம்.

உ.வே.சா. விருது-

மருது அழகு ராஜ்

கம்பர் விருது-

செ.வை.சண்முகம்

சொல்லின்செல்வர் விருது-

டாக்டர் சுதா சேசையன்

ஜி.யு.போப் விருது-

ஜெ. நாராயணசாமி

உமறுப்புலவர் விருது-

சே.மு. முகம்மதலி

இத்துடன் 2013-ம் ஆண்டின் முதல்-அமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு ந.தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

கவிஞர் பிறைசூடனுக்கு விருது

2015-ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் 2015-ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர் விருது-

கவிஞர் பிறைசூடன்

உ.வே.சா. விருது-குடவாயில் பாலசுப்பிரமணியன்

கம்பர்?விருது-கோ.செல்வம்

சொல்லின் செல்வர் விருது- சோ.சத்தியசீலன்

ஜி.யு.போப் விருது-மதுரை இளங்கவின் (எம்.ஆரோக்கியசாமி)

உமறுப்புலவர் விருது-மு.சாய்பு மரைக்காயர்

இளங்கோவடிகள் விருது- நிர்மலா மோகன்

தங்கப்பதக்கம்

2014-ம் ஆண்டின் முதல்-அமைச்சர் கணினித்தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும். மேற்காண் விருதுகள் அனைத்தும் அரசால் பின்னர் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment