Saturday 4 April 2015

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் திருவாரூர் கலெக்டர் மதிவாணன் தகவல்























வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் மதிவாணன் கூறினார்.

உதவித்தொகை

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை முறையாக புதுப்பித்திருக்க வேண்டும். 2010-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எஸ்.எஸ்.எல்.சி. தவறியவர்களுக்கு மாதம் ரூ.100-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதிகள்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு மாதம் ரூ.375-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.450-ம், உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசு துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்க கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

கடைசி நாள்

தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (மே) 29-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறும் காலத்தில் பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தவறியவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை உடனே அளிப்பது அவசியம் ஆகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment