Wednesday 15 April 2015

திருவாரூரில் கோடை மழை

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மதியம் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.


கடந்த 15 நாள்களுக்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் சுமார் 100 டிகிரியை தாண்டிய நிலையில், திங்கள்கிழமை சற்று குறைந்து மழை பெய்வது போன்ற சூழல் நிலவியது. மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. திங்கள்கிழமை இரவு வரை நீடித்த குளிர்ந்த நிலை செவ்வாய்க்கிழமை காலை வெயிலோடு தொடங்கியது.


எனினும், அவ்வப்போது கருமேகம் சூழ்ந்து வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொண்டிருந்தது. பிற்பகல் 2 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. திடீர் கோடை மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. நகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருந்தாலும், பல நாள்களாக வறண்டு கிடந்த பூமி மழைநீரை சிறிது நேரத்தில் உறிஞ்சிவிட்டது.

No comments:

Post a Comment