Saturday 25 April 2015

சிங்கப்பூரில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய 2 தமிழர்களுக்கு விருது

























சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தொங்கிய குழந்தையின் உயிரை 2 தமிழர்கள் காப்பாற்றினர். அவர்களுக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி கவுரவித்தது.

தமிழர்கள்

சிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தில் இணைந்து வேலை செய்து வந்தவர்கள், சுப்பிரமணியன் சண்முகநாதன் (வயது 35), பொன்னன் முத்துகுமார் (24). இவர்கள் இருவரும் தமிழர்கள்.

அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு குழந்தையின் அழுகுரலை, சம்பவத்தன்று இருவரும் கேட்டனர்.

தவறி விழுந்து தொங்கியது

அவர்கள் அங்கு ஏறிட்டு பார்த்தபோது, ஒரு பெண் குழந்தை, 2-வது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் வெளியே துணிகளை காயப்போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக்கொண்டிருப்பதை கண்டார்கள். இது குறித்து அவர்கள் உடனடியாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடந்து விடக்கூடாது என கருதிய அவர்கள், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வரும்வரையில் காத்திருக்காமல் தாங்களே களத்தில் இறங்கினர்.

குழந்தையை மீட்டனர்

சண்முகநாதன் உயிரைப் பணயம் வைத்து, இரண்டாவது மாடியில் முதலில் ஏறினார். அவரை தொடர்ந்து முத்துகுமார் ஏறினார். இருவரும் சேர்ந்து குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தார்கள்.

அவர்கள் குழந்தையை மீட்டு கொண்டு வந்து விட்ட நிலையில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்தனர். அவர்கள் சண்முகநாதனையும், முத்துகுமாரையும் பாராட்டினர். அந்தக் குழந்தை ‘ஐ பாட்’ வைத்து கேம்ஸ் விளையாடியபோது தவறி விழுந்துவிட்டதாக தெரியவந்தது.

விருது

குழந்தையின் உயிரை தீரமுடன் செயல்பட்டு காப்பாற்றிய சண்முகநாதனுக்கும், முத்து குமாருக்கும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி சிறப்பித்தது.

இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் 4-வது பிரிவு துணை கமாண்டர் மைக்கேல் சுவா, சண்முகநாதனையும், முத்துகுமாரையும் வெகுவாக பாராட்டி விருது வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது உள்ளூர் எம்.பி., ஆங் வெய் நெங்கும் உடனிருந்தார்.

விருது பெற்ற முத்துகுமார் இதுபற்றி கூறுகையில், “இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. இதுபோன்ற வீர தீர செயலை பலரும் முன்வந்து செய்ய இது உந்துதலாக அமையும். இப்படி செய்கிறபோது, நாளை என் பிள்ளைக்கு ஒரு அபாயகரமான நிலையில், மற்றவர்கள் உதவுவார்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment