Friday 3 April 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.,6 முதல் புத்தகம் விநியோகம்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.

அதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 புத்தகங்கள் 100 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.

பத்தாம் வகுப்புக்கான புத்தகங்களும் மாவட்டங்களுக்கு பெரும்பாலும் அனுப்பப்பட்டு விட்டன. 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்ததும் இந்த மாணவர்களுக்கான புத்தகங்களும் விநியோகிக்கப்பட உள்ளன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.

இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்

No comments:

Post a Comment