Friday 10 April 2015

நாகூர் அனிபா உடல் சொந்த ஊரில் அடக்கம்


























பிரபல இஸ்லாமிய பாடகர் நாகூர் அனிபா உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நாகூர் அனிபா

பிரபல இஸ்லாமிய பாடகரும், தி.மு.க. பிரமுகருமான நாகூர் அனிபா சென்னை கோட்டூர் புரம் 3-வது மெயின் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். 96 வயதான நாகூர் அனிபா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து நாகூர் அனிபாவின் உடல் அவரது சொந்த ஊரான நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, மதிவாணன், உபயதுல்லா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பூண்டிகலைவாணன், குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை க.அன்பழகன், ஜவாகிருல்லா, நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக்ஹசன்சாகிபு, தர்கா பரம்பரை டிரஸ்டி காமில்சாகிபு, மஸ்தான் சாகிபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

உடல் அடக்கம்

பின்னர் நாகூர் அனிபாவின் உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக நாகூர் தர்காவிற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு தொழுகை நடைபெற்றது. பின்னர் அங்குள்ள தர்கா மையவாடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய இசை பாடல்களில் இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்களின் மனதில் மறக்க முடியாத இடத்தை பிடித்த நாகூர் அனிபாவுக்கு நவுசாத் அலி, நாசர் அலி என 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்

No comments:

Post a Comment