Saturday 3 October 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
 2016 ஜனவரி 1ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், இடமாற்றம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 ÷ஏற்கெனவே கடந்த 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடந்தது. அதில், 5 லட்சத்து 53,405 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அதில், 4 லட்சத்து 43,992 பேர் பெயர் சேர்ப்புக்காகவும், 15,536 பேர் நீக்கத்துக்கும், 63,873 பேர் திருத்தங்கள் செய்யவும், 30,004 பேர் தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கும் விண்ணப்பங்களை அளித்தனர்.
 நாளை சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த முகாம் நடக்கிறது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளைச் செய்யலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
 வாக்காளர்கள் கோரிக்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்புப் பலகைகளை முகாம் நடைபெறும் இடங்களில் வைக்க வேண்டும் என வாக்காளர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விவரங்களை வாக்குச் சாவடிகளில் உள்ள அலுவலர்கள் சரிவர தெரிவிப்பதில்லை எனவும், பெயர் இருக்கிறதா என்ற தகவலைக் கூட பார்த்துச் சொல்வதற்கு அவர்களால் முடியவில்லை என்றும் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 எனவே, சிறப்பு முகாம் நடக்கும் வாக்குச் சாவடிகளில் உரிய தகவல் பலகைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment