Monday 1 June 2015

பள்ளி மாணவர்கள் புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை பழைய பாஸையே பயன்படுத்தலாம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாஸ் கிடைக்கும் வரை அவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என்று போகுவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஒரு சில தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. புதிய பஸ் பாஸ்கள் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்த லாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் கூறும் போது, “இந்த ஆண்டு பஸ் பாஸை விரைவில் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக சம் பந்தப்பட்ட போக்குவரத்து கழகங் களின் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்து மாணவர்களின் முழு விவரங்கள் வந்தவுடன் உடனுக்குடன் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் தேவைக்கு ஏற்றவாறு வழங்கவுள்ளோம். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ்களை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடத்துநர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.


No comments:

Post a Comment