Monday 29 June 2015

சென்னை மெட்ரோ ரயில் சேவை: ஜெயலலிதா இன்று தொடக்கிவைக்கிறார்


சென்னை மாநகர மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்குகிறது. சென்னை ஆலந்தூர் - கோயம்பேடு இடையிலான முதல் மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடக்கி வைக்கிறார்.
 சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த 45.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றன. 2008-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டபோது இதன் திட்ட மதிப்பீடு ரூ. 14,600 கோடியாக இருந்தது.
 வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கி.மீ. தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது வழித்தடமும் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும் சார்நிலைக் கடனாக 5 சதவீதமும் வழங்குகிறது. தமிழக அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலை கடனாக 5.78 சதவீதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவீத நிதி ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது.
 இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே 10 கி.மீ. தொலைவுக்கான முதல் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கிறார். அதன்பிறகு, கோயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும், கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ நிர்வாக அலுவலகம், பணிமனை, கட்டுப்பாட்டு அறைகளையும் காணொலிக் காட்சி முறையில் அவர் திறந்து வைக்கிறார்.
 இதன்மூலம் ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரெயில் சேவை முழுமையான பயன்பாட்டுக்கு வரும். இந்த விழாவில் அரசு தலைமை செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
 தொடர் சோதனை: மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டத்தை 2013-ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போதிலிருந்து சுமார் 20 மாதங்களாக மெட்ரோ ரயிலுக்கான தொடர் சோதனைகள் நடைபெற்று வந்தன.
 தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் 100 பெட்டிகள் கொண்ட 25 ரயில்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக ஆலந்தூர் - கோயம்பேடு இடையே பயணியர் பயன்பாட்டுக்கு 9 ரயில்கள் இயக்கப்படும். 
 சென்னை மெட்ரோ ரயிலின் மொத்த சேவைக்கு 32 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இன்னும் 7 ரயில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு கொண்டுவர வேண்டியுள்ளது.
 மூன்று நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
 மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன், மூன்று நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 24 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம். இதன் காரணமாக, சென்னையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ஜப்பான், சீனாவில் நடைமுறையில் இருக்கும் ரயில்களைப் போல சென்னையிலும் அதிவேகத்துடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்தியாவில் தில்லி, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
 

No comments:

Post a Comment