Wednesday 10 June 2015

ஹஜ் யாத்ரீகர்களுக்கு சிறப்பான வசதிகள்: மத்திய அரசு உறுதி


""ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான வசதிகள் செய்து தரப்படும்; கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது யாத்ரீகர்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.
 இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஹஜ் மாநாட்டில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் பேசியதாவது:
 ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், யாத்ரீகர்களுக்கு செய்துள்ள ஏற்பாடுகளை திடீரென நான் ஆய்வு செய்வேன். அப்போது போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது தெரிய வந்தால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏர் இந்தியா உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் சிறப்பான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், உணவுகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 ஹஜ் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களின் சுவைக்கேற்ப, சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு 4 வகையான உணவுகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஹஜ்ஜுக்கு நேரடியாக இயக்கப்படும் விமானத்தின் கட்டமானது, 1,890 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது, கடந்த ஆண்டு 2,635 டாலராக இருந்தது.
 ஹஜ் யாத்திரையில், இந்தியாவுக்கான பயணிகள் ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சவூதி அரேபிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், இதற்கு சாதகமான பதில் தெரிவிக்கப்படும் என நம்புகிறேன் என்றார் வி.கே. சிங். இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3.83 லட்சம் முஸ்லிம்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.20 லட்சமாக இருந்தது.
 

No comments:

Post a Comment