Friday 5 June 2015

மேகி உள்பட 4 வகை நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நெஸ்லே நிறுவனத்தின் மேகி உள்பட பிரபலமான நான்கு வகையான நூடுல்ஸ்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்தத் தடையானது, மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனை செய்யுமாறு தமிழக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். 
 தமிழகத்தில் 65 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை சென்னை, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஆய்வகங்களில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மேகி நூடுல்ஸ்களில் சுவையை அளிக்கும் 
 மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற ரசாயனப் பொருள், ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதா என அறிய உத்தரவிடப்பட்டது.
 இந்த நிலையில், தமிழகத்தில் மேகி உள்பட நான்கு நிறுவனங்களின் நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். 
 இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 தமிழகம் முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் ஏழு மாதிரிகளில் பரிசோதனைக்குப் பிறகு ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இந்த ஏழு மாதிரிகளில் ஆறு மாதிரிகளில் ஈயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்துக்கு 2.5 பகுதிகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எந்தெந்த நூடுல்ஸ் வகைகள்? 
 மேகி நூடுல்ஸ் (Maggi Noodles), வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ் (Wai Wai Xpress Noodles), ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (Reliance Select Instant Noodles),
 ஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ் (Smith and Jones Chicken Masala Noodles) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
 அதன்படி, உணவுப் பாதுகாப்பு-தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், நான்கு நிறுவனங்களும் நூடுல்ஸ் உணவுப் பொருள்களைத் தமிழகத்தில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வகை உணவுப் பொருள்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 தில்லி, கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இப்போது தமிழகத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் இதர நான்கு நகரங்களில் மேகி நூடுல்ஸின் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதன் ஆய்வு அறிக்கைகள் வெள்ளிக்கிழமை கிடைக்கப் பெற உள்ளன. இந்த ஆய்வு அறிக்கைகளுக்கு முன்பாகவே, சென்னை ஆய்வு மையத்தில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment