ஜிஎஸ்டி மசோதாவை நடைமுறைப்படுத்த இரு அவைகளும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரி 18%க்கு மிகக் கூடாது என்ற உத்தரவாதம் தேவை என்று கூறினார் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம்.

நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மாநிலங்களவையில் மீண்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நான்கு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள இம்மசோதாவின் நகல் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தற்போது தனித்தனியாக விற்பனை வரியை வசூலிக்கின்றன. இதற்கு பதிலாக நாடு முழுவதும் ஒருமுனை வரியை கொண்டுவர வழிவகை செய்யும் ஜிஎஸ்டி மசோதாவை கடந்த 2006-ம் ஆண்டில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா 2011-ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு மே மாதம் மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரிலேயே ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து ஜிஎஸ்டி மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதன் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது, அருண் ஜேட்லி பேசி முடித்தவுடன் ப.சிதம்பரம் பேசியதாவது:

"நாங்கள் முதன்மை எதிர்க்கட்சியின் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்தோம், நாங்கள் தோல்வியடைந்தோம், கடந்த 2 ஆண்டுகளாக நடப்பு அரசும் ஜிஎஸ்டி மசோதாவை இப்போதைய முதன்மை எதிர்க்கட்சி ஆதரவு இல்லாமலேயே தாக்கல் செய்ய முயன்றது, நீங்களும் இதில் தோல்வியடைந்தது மகிழ்ச்சியே.

ஜிஎஸ்டி என்ற கருத்தை காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை. நாம் அதனை விவாதிக்கவும் இல்லை கலந்தாலோசிக்கவும் இல்லை. மசோதா மட்டுமே எதிர்க்கப்படுகிறது. ஏனெனில் இதைவிடவும் துல்லியமான மசோதா சாத்தியமானது என்று நாங்கள் கருதுகிறோம்.

இதில் 4 முக்கிய விவகாரங்கள் உள்ளன. இந்த மசோதாவில் இன்னும் சில விஷயங்கள் விகாரமாகவே உள்ளன. திருத்த மசோதாவில் இந்திய ஒட்டுமொத்த நிதிக்கு எது சேரும் எது சேராது என்பது பற்றி சில விதிமுறைகளைச் சேர்த்திருக்கிறீர்கள். இது முன்கூட்டியே சிந்திக்கப்பட்டிருக்க வேண்டும். ஒட்டுமொத்த நிதியில்தான் வரிவருவாய் செல்ல வேண்டும். அது வேறு எங்கும் செல்லக்கூடாது. வரைவு மசோதா இது குறித்து தெளிவாக எதையும் சொல்லாமல் விட்டுவிட்டது.

சேரிடம் அடிப்படையிலான இந்த வரியில் பிற்போக்குத்தனமாக சில மாநிலங்கள் கூடுதல் 1% வரி சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிப்பது ஏன்? அது நீக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியே.

2-வது முக்கிய விவகாரம், தகராறு தீர்வுகள். மத்திய மாநில அரசுகளுக்கிடையே, அல்லது இரு மாநிலங்களுக்கிடையே, அல்லது பல மாநிலங்களுக்கிடையே வரி தொடர்பான தகராறுகள் எழும்போது அரசமைப்பு திருத்தம் அது பற்றி அமைதியாக இருக்க முடியாது. சட்டப்பிரிவு 131 இதனை தெளிவாகக் குறிப்பிடுகிறது. தகராறு தீர்ப்பு என்பது நீதித்துறை அதிகாரத்துக்குரியது. நீதித்துறை இது குறித்து எப்போதும் எச்சரித்து வந்துள்ளது, நீதித்துறை அதிகாரம் மசோதா மூலம் ஆக்ரமிக்கப்பட்டால் நாங்கள் அதனை ரத்து செய்வோம் என்று நீதித்துறை எச்சரித்துள்ளது. சுற்றில் விடப்பட வரைவு மிகவும் போதாமையாக உள்ளது.

"இந்த மசோதாவின் இருதயம் வரி விகிதம்" என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிக்கை கூறுகிறது. மறைமுக வரிகள் கூடியவரையில் குறைவாக இருப்பதே விரும்பத்தக்கது என்று அதில் கூறப்பட்டுள்ளது. வரி பொருளைப் பொறுத்து 18%க்கு சற்று கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். வரி என்பது தனிப்பட்ட முடிவாக மாறிவிடக்கூடாது, பெட்ரோல் விலைகள் இப்படியாக மாறிவருகின்றன. ஆனால் மக்கள் வரியைப் பொறுத்தவரையில் குறைவான மறைமுக வரியை எதிர்நோக்குகின்றனர்.

எனவே மக்களின் சார்பாக நான் கேட்பதெல்லாம் உங்கள் பொருளாதார ஆலோசகர் பரிந்துரைத்த விகிதத்தில் வரியை பராமரிக்கவும். நீங்கள் இதனை அரசியல் சாசன திருத்த மசோதாவில் சேர்க்கவில்லை. 18%க்கு மேல் வரி இருக்கக் கூடாது.

23-24% என்று நீங்கள் அதிகரித்தால் அது சரியாகாது. மறைமுக வரிகள் தற்போது 13-14% என்றே உள்ளது.

ஜிஎஸ்டி மசோதா நிதிமசோதாவாக கொண்டு வரப்பட வேண்டும் என்றும், பண மசோதாவாக கொண்டு வரக்கூடாது என்றும் நாடாளுமன்ற இருஅவை உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்றும் நான் நிதியமைச்சரிடமிருந்து உத்தரவாதம் கோருகிறேன்."

இவ்வாறு கூறினார் ப.சிதம்பரம்.