Saturday 1 November 2014

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: பலத்த மழைக்கு வாய்ப்பு



வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும்.
மேலும், இந்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, மேலும் சில நாள்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும். அதேவேளையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி, லட்சத்தீவுகளுக்கு அருகில் நகர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.
வானிலை முன்னறிவிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை மிதமான மழையோ, பலத்த மழையோ பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும்.
வலுவிழந்த புயல்: அரபிக் கடலில் அதி தீவிரப் புயலாக இருந்த நிலோஃபர் புயல், வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment