Sunday 2 November 2014

கலெக்டருடன் ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: செய்தித்துறை அதிகாரி உட்பட 3 பேர் இடமாற்றம்


 
திருவாரூர் கலெக்டரை ஸ்டாலின் சந்தித்ததன் எதிரொலியாக, ஏ.பி.ஆர்.ஓ., உட்பட மூன்று அதிகாரிகள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்ற முத்திரையுடன், அங்கிருந்து மாற்றப்பட்டனர்.



பாதிப்பை பார்வையிட...:
திருவாரூர் மாவட்டத்துக்கு, கடந்த, 27ம் தேதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வருகை தந்தார். மாவட்ட, தி.மு.க., ஆய்வுக் கூட்டம் நடத்திய பின், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், மழையால் பாதித்த பயிர்களை பார்வையிட்டார்.பின், திருவாரூர் எம்.எல்.ஏ.,வான, தி.மு.க., தலைவர் கருணாநிதி சார்பில், திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, உடைந்த நிலையில் இருந்த கமலாலய குள சுவர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள சாலைகளை பார்வையிட்டார்.பின், திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணனை சந்தித்து, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள பிரச்னைகள் அடங்கிய பட்டியலை வழங்கி, 'இப்பட்டியலில் உள்ளவற்றை, அலுவலர்கள், வேண்டுமென்றே பராமரிக்காமல் வைத்துள்ளனர். மக்கள் நலனுக்காக இவற்றை பராமரிக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.அதைத் தொடர்ந்து ஸ்டாலின் பேட்டியளித்தார்.

ஸ்டாலினின் பேட்டியாலும், அவர் கலெக்டரை சந்தித்து விட்டு சென்றதாலும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அதிர்ச்சி அடைந்தார். அவர் யோசனைப்படி, ஸ்டாலின் கைக்கு, பாதிக்கப்பட்ட இடங்களின் பட்டியல் எவ்வாறு சென்றது, அதற்கு யார், யார் உடந்தையாக இருந்தனர் என, தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டார்.

தி.மு.க., பின்னணி:
வருவாய் ஆய்வாளர் இளங்கோ, கடந்த, தி.மு.க., ஆட்சியில், அப்போதைய பால் வளத்துறை அமைச்சர் மதிவாணனின் பி.ஏ.,வாக செயல்பட்டார். ஏ.பி.ஆர்.ஓ., செல்வகுமார், தி.மு.க., பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சகாயம், தி.மு.க.,வினருடன் தொடர்பு வைத்திருப்பவர் எனத் தெரிந்தது.உடனடியாக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சகாயம், கலெக்டர் அலுவலக எழுத்துப் பணிக்கும்; திருவாரூர் வருவாய் ஆய்வாளர் இளங்கோ, வட்ட வழங்கல் அலுவலக பணிக்கும்; திருவாரூர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., (செய்தி) செல்வகுமார், திருவண்ணாமலை மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ., (செய்தி)யாகவும் மாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment