Saturday 5 March 2016

TNelections2016:திருவாரூர் மாவட்டத்தில் 92 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை

திருவாரூர் மாவட்டத்தில் 92 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையென கண்டறியப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், மன்னார்குடி தொகுதிக்கு மன்னார்குடி கோட்டாட்சியர், திருவாரூர் தொகுதிக்கு திருவாரூர் கோட்டாட்சியர், நன்னிலம் தொகுதிக்கு கலால் உதவி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மாவட்ட அளவில் அரசுத்துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு, தேர்தல் நடைமுறை குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களையும், ஆலோசனைகளை தெரிவிக்க ஏதுவாக ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதனை 18004257035 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இதில் 24 மணி நேரமும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 652 இடங்களில் 1150 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த இடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 92 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. பிகார் மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேவையை காட்டிலும் 10 சவீதம் கூடுதலாக 1493 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் இனி அரசியல் கட்சியினர் அரசின் எந்த ஒரு நலத் திட்ட உதவிகளையும் வழங்கக் கூடாது என்றார் மதிவாணன்.
பேட்டியின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#TNelections2016 #AC168Thiruvarur  #Tiruvarur

No comments:

Post a Comment