தேர்தலில் வேட்பாளர்களை நிராகரிப்பதற்கான ‘நோட்டா’ பொத்தானுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் சின்னம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற் கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத போது, ‘யாருக்கும் வாக்கு இல்லை’ (None Of The Above NOTA) என்ற பொத்தானை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ‘நோட்டா (NOTA)’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2013 டிசம்பர் 4-ம் தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது.

விருப்பம் உள்ளவர்கள் வாக்க ளிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி பொத்தா னாக இந்த ‘நோட்டா’ பொருத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வசதி குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது தனி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறும்போது, “முதல் முறையாக நோட்டாவுக்காக அறிமுகப்படுத்தப்படும் சின்னம், அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் (National institute of design) வடிவ மைக்கப்பட்டது. இந்த சின்னம் நோட்டாவுக்கு வாக்களிக்க விரும் பும் வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வசதி குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் விழிப் புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்” என்றார்.

செவ்வக வாக்குப்பதிவு இயந் திரத்தின் மீது பெருக்கல் குறி இட்டது போல நோட்டா சின்னம் அமைந்துள்ளது. இது அசாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்களில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.