Monday 14 March 2016

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது; 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

நாளை தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 12 ஆயிரத்து 53 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு இந்த ஆண்டைவிட 11 ஆயிரத்து 319 பேர் குறைவாக எழுதினார்கள்.

பள்ளிக்கூட மாணவர்கள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 301 பேர்களும், மாணவிகள் 5 லட்சத்து 20 ஆயிரத்து 884 பேர்களும் எழுதுகிறார்கள். அதாவது மாணவிகளை விட மாணவர்கள் 30 ஆயிரத்து 417 பேர் அதிகமாக எழுதுகிறார்கள்.

பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை தவிர, 48 ஆயிரத்து 564 பேர் தனித்தேர்வர்கள் எழுத இருக்கிறார்கள். பள்ளிக்கூட மாணவர்களும் தனித்தேர்வர்களும் சேர்த்து 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

தேர்வு மையங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் மட்டும் 48 தேர்வு மையங்களில் 298 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 41 பேர் எழுதுகிறார்கள். சென்னையில் 574 பள்ளிகளில் இருந்து 53 ஆயிரத்து 159 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழ் வழியில் படித்து 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

செல்போன்களை தேர்வு மையத்திற்குள் கொண்டுசெல்ல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளுக்கு பாதுகாப்பு

வினாத்தாள் கட்டுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 350 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களுக்கு 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தேர்வு எழுதுவோரை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள். தேர்வு மையங்களை பார்வையிட ஏதுவாக 6 ஆயிரத்து 600 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment