Friday 11 March 2016

‘பூத் சிலிப்’ இருந்தாலே ஓட்டுபோடலாம்; தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டி

வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்பு அரசியல் கட்சிகள் செலவழிக்கப்படும் பணத்துக்கு வரம்பு கிடையாது. ஆனால் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு செலவழிக்கப்படும் பணம் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.

அதற்காக இப்போதே வாகன அனுமதி பெற்று விட்டு அதை வேட்பாளர் பிரசாரத்தின்போது பயன்படுத்தினால் அது அந்த வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை ரூ.37 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் ஓட்டுகள் தாமதமாக கொடுக்கப்படுகின்றன என்ற புகார்கள் கூறப்பட்டன. இந்த தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படும்.

இதுதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் 38 ஆயிரம் தனியார் வீடியோகிராபர்கள், 30 ஆயிரம் வாகன டிரைவர்கள், 10 ஆயிரம் கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

இளைஞர்களின் பங்களிப்பு

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்துகொண்டு பேசியதாவது:- 

முன்பு போல வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க தாலுகா அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டியதில்லை. 5 நிமிடங்களில் உங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. இங்குள்ள மாணவர்கள் அனைவரும் வைத்திருக்கும் ‘ஸ்மார்ட்’ போன் மூலம் உங்கள் பெயர்களை சேர்க்கலாம். புதிய புகைப்படங்களையும் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். 100 சதவீத நேர்மை, 100 சதவீத வாக்குப்பதிவு. இது தான் நமது நோக்கம்.

தமிழகத்தில் இளைஞர்கள் வாக்குகள் தான் முக்கியம். ஆனால் 18 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் 23 சதவீதம் தான் பதிவு செய்து கொண்டுள்ளனர். இளைஞர்களின் பங்களிப்பை தேர்தலில் அதிகரிப்பதற்காகத்தான் இதுபோன்று கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

வீட்டில் மட்டுமல்லாமல் உங்கள் தெருக்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களின் பெயர்களையும் நீங்கள் சேர்க்க முன்வர வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் விரைவான சேவைகளை அளிப்பது போல மாணவர்களாகிய நீங்களும் விரைவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

‘வாட்ஸ்-அப்’பில் தகவல் தெரிவிக்கலாம்

தேர்தல் நேரத்தில் ஏதாவது குறைகள், விதிமுறை மீறல்கள் ஆகியவற்றை நீங்கள் எங்காவது பார்த்தால் அதுபற்றி எனக்கு வாட்ஸ்-அப் பில் தகவல், போட்டோக்களை அனுப்புங்கள். அந்த தகவல்கள், போட்டோக்கள் எங்கிருந்து வந்தது என்பதை ஜி.பி.எஸ். மூலம் நாங்கள் கண்டுபிடித்து அந்த இடத்துக்கு 10 நிமிடங்களில் பறக்கும் படையை அனுப்பி விடுவோம்.

இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவதை தடுக்க நீங்கள் உதவி செய்ய முடியும். பறக்கும் படையை கண்காணிக்க ஜி.பி.எஸ். முறை உள்ளது. எனவே அவர்கள் ஏமாற்ற முடியாது. மே மாதம் 16-ந்தேதி அனைவரும் தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

1,212 புகார்கள்

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் இதுவரை 600 கல்லூரிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மீதி கல்லூரிகளில் விரைவில் நடத்தி முடிக்கப்படும். சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விடும்.

தேர்தல் புகார்கள் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 212 புகார்கள் வந்துள்ளன. இதில் 700 புகார்கள் பேனர்கள் எடுக்க வேண்டும், சுவரொட்டிகள் அகற்ற வேண்டும் என்பவை தான். புகார்கள் வந்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகளின் மாற்றம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகார் கொடுத்தவருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து தகவல் அனுப்பப்படும்.

பூத் சிலிப்

போலி வாக்காளர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டனர். இன்னும் போலி வாக்காளர்கள் இருப்பதாக புகார்கள் வந்தால் அவர்கள் தனிப்பட்டியலில் வைக்கப்படுவார்கள். அந்த பட்டியலில் உள்ளவர்கள் ஓட்டுப்போடும் போது வாக்குச்சீட்டு தவிர மற்ற ஆவணங்களும் கொண்டு வந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள்.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பாக நல்வாழ்வுத்துறை எங்களிடம் அனுமதி கேட்டால் அதுபற்றி முடிவு செய்யப்படும். ஓட்டுப்போட செல்லும் போது தேர்தல் கமிஷன் சார்பில் வீடு வீடாக வழங்கப்படும் வாக்குச்சீட்டு(பூத் சிலிப்) இருந்தாலே வாக்குப்பதிவு செய்யலாம். ஆனால் முகவரி மாறி சென்றவர்களின் பெயர்கள் தனிப்பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படாது. அத்தகைய வாக்காளர்கள் வேறு ஆவணங்களை காட்டி ஓட்டுப்போடலாம்.

இவ்வாறு அவர் கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) ஆசியா மரியம், உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் வாக்குப்பதிவு முத்திரை வடிவில் மாணவர்கள் நின்று 100 சதவீத வாக்குப்பதிவு செய்வதாக உறுதி ஏற்றனர். 

No comments:

Post a Comment