முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா ஞாயிறன்று தலைமைச் செயலகத்துக்கு வந்து அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததோடு புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இவருக்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், காவல்துறையினருக்கு வாகனங்களையும் கடலோர ரோந்து வாகனங்களையும் வழங்கினார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை மாநகராட்சியில் 45 அம்மா உணவகங்கள், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள், என மொத்தம் 201 அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். 

ஜெயலலிதா ஆணை பிறப்பித்து கையொப்பமிட்ட ஐந்து திட்டங்கள் வருமாறு:

1. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்;

2. தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்;

3. பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம்;

4. 1,274 எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்; மற்றும்

5. மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம்;

ஆகிய திட்டங்களில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா.