Thursday 7 May 2015

காரைக்காலில் புரதச்சத்து மிகுந்த ‘கோலா மீன்கள்’ விற்பனை அமோகம்























காரைக்காலில் கோலாமீன்கள் அதிகளவில் கிடைப்பதால், விற்பனை அமோகமாக உள்ளது. பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

கோலா மீன்கள்

அசைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் மீன் உணவும் ஒன்றாகும். மீன்களில் பல வகைகள் இருந்தாலும் அவற்றில் எப்பொழுதும் கிடைக்கும் மீன்களை விட ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கிடைக்கும் மீன்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ‘கோலா மீன்’களுக்கும் அசைவ உணவு பிரியர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நீரின் மேற்பரப்பில் பறப்பது போல் பாய்ந்து செல்வதால் இதற்கு ‘பறக்கும் மீன்’ என்ற பெயரும் உண்டு.

சாதாரணமாக இந்த கோலா மீன்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த மீன்களின் பக்கவாட்டில் அவை பறப்பதற்கான இறக்கை போன்ற அமைப்பு அமைந்துள்ளதால், மற்ற மீன்களை போன்று இல்லாமல் இவை தண்ணீருக்கு அடியிலிருந்து எழும்பி கடலின் மேற்பரப்பில் பறந்து-பாய்ந்து செல்லும் தன்மை கொண்டது. அவை தண்ணீரிலிருந்து பறந்து, பறந்து செல்வது பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

களைகட்டும் சீசன்

நமது வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறிப்பாக காரைக்கால் உள்ளிட்ட புதுச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ‘கோலா மீன்கள்’ சீசன் களைகட்டுவது வழக்கம். அதன்கடி கடந்த ஏப்ரல் மாத கடைசியில் கோலாமீன் சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கினாலும் குறைந்தளவே கோலா மீன்கள் கிடைத்தன. தற்பொழுது கோலா மீன்கள் அதிகளவில் கிடைப்ப தால் மீனவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லா மீனவர்களும் கோலாமீன் பிடிக்க செல்வதில்லை. குறிப்பிட்ட மீனவர்கள் மட்டும் அதிகாலையில் பைபர் படகுகளில் கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். ஒரு படகில் சுமார் 4 அல்லது 5 மீனவர்கள், சுமார் 50 முதல் 100 கி.மீ. தூரம் வரை ஆழ்கடல் பகுதிக்கு சென்று பிரத்யேகமான ‘கோலா வலை’களை பயன்படுத்தி கோலா மீன்களை பிடிக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் கரைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு தயாராக இருக்கும் மீனவ பெண்கள் கோலா மீன்களை ஏலம் கேட்கின்றனர். ரூ.5 ஆயிரத்திலிருந்து இந்த மீன்கள் ஏலம் விடப்படுகிறது. அதிக தொகையாக ஏலம் கேட்பவர்களுக்கு கோலாமீன்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ஏலம் எடுத்தவர்கள் அந்த மீன்களை கொள் முதல் செய்து பிறகு சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

புரதச்சத்து மிகுந்தது

‘பிரஷ்’ ஆக மார்க்கெட்டில் கிடைப்பதால் கோலாமீன் சீசன்களில் மாலை நேரங்களில் மீன் மார்க்கெட் களைகட்டுகிறது. ‘பிரஷ்’ மீன்களின் சுவையே அலாதியானது. இந்த மீன்களில் புரதச்சத்தும் அதிகளவில் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கோலாமீன்கள் கிடைப்பதால் பொது மக்களும், குறிப்பாக அசைவ உணவு பிரியர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். ஒருசிலர் மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று கடலிலிருந்து மீன்கள் பிடித்து வந்து ஏலம் எடுக்கப்பட்டதும் அங்கேயே வாங்கிச் செல்கின்றனர். இந்த கோலாமீன் சீசன் அடுத்த மாதம் (ஜூன்) இரண்டாவது வாரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment