Monday 4 May 2015

பேஸ்புக்’ காதலில் வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்கள்
















பேஸ்புக் மற்றும் இணையதளம் மூலம் காதலில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்கள் நிறைய பேர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள்.

பேஸ்புக் காதல்

பேஸ்புக், இணையதளம் மற்றும் செல்போன் ஆகியவை மூலம் தொடர்பு ஏற்பட்டு காதல் வலையில் விழுந்து இளம்பெண்கள் நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. தாங்கள் காதலிக்கும் வாலிபர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? ஏற்கனவே திருமணம் ஆனவர்களா? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்காமல், கண்டதும் காதல், பேசியதும் திருமணம் என்று பெற்றோர்களுக்கு கூட தெரியாமல் நிறைய இளம்பெண்கள் குடும்ப வாழ்க்கையில் ரகசியமாக ஈடுபட்டு விடுகிறார்கள்.

இந்த குடும்ப வாழ்க்கை 6 மாதங்கள் கூட நிலைப்பதில்லை. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற நிலையில் வெறும் படுக்கை அறையில் மட்டும் பொழுதை போக்கி விட்டு, பின்னர் வயிற்றில் குழந்தையுடனோ அல்லது கற்பை பறிகொடுத்து விட்டோ, நடுத்தெருவிற்கு வந்து விடுகிறார்கள். பின்னர் தனது நிலையை சொல்லி நீதிகேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் வந்து கதவை தட்டி நிற்கிறார்கள்.

கணவரின் 4-வது திருமணம்

நடிகை அல்போன்சாவிடம் தனது காதல் கணவரை பறிகொடுத்துவிட்டு, அவரை மீட்டுத்தர வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார். அதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்குள் நேற்று சென்னை மண்ணடியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர் இதுபோன்ற புகாருடன் வந்தார்.

சென்னையில் பளிங்கு கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திவரும் இளம் தொழில் அதிபரை பேஸ்புக் மூலம் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து அவருடன் வாழ்க்கை நடத்தினார் அந்த பெண். இதன் மூலம் வயிற்றில் தோன்றிய கருவையும் அழித்து விட்டதாகவும், தற்போது தனது ரகசிய காதல் கணவர் வருகிற 2-ந்தேதி ஆக்ராவில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார்.

பெண்களே ஏமாறாதீர்கள்

அவர் ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர். அவரது தற்போதைய 4-வது திருமணத்தை தடுத்து நிறுத்தி அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த இளம்பெண் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று புகார்கள் இதுபோன்று வருகிறது. பேஸ்புக் மூலம் காதலில் விழுந்து ஏமாறும் பெண்கள் தான் இதுபோன்ற அதிக புகாருடன் வருகிறார்கள். இதுபோன்ற விஷயத்தில் குறிப்பாக படித்த இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று கமிஷனர் அலுவலக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

No comments:

Post a Comment