Wednesday 20 May 2015

அழகுக்காக உடல் எடையை குறைக்க சிகிச்சை: 10 மாதங்களாக கோமாவில் இருந்த சென்னை பெண் சாவு


IST


































அழகுக்காக உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்று, அதன் காரணமாக கடந்த 10 மாதங்களாக கோமாவில் இருந்த சென்னை பெண் உயிரிழந்தார். அவரது சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என்று உறவினர்கள் புகார் கூறி வருகின்றனர்.

அழகுக்காக அறுவை சிகிச்சை

சென்னை வள்ளுவர்கோட்டம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை கக்கன் காலனியை சேர்ந்தவர் கவுரிசங்கர். இவருடைய மனைவி அமுதா (வயது 35). இவர்களுக்கு விக்னேஷ், விஜய் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அமுதா சற்று குண்டாக இருந்ததால், தனது உடல் எடையை குறைக்க விரும்பினார். இதையடுத்து தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று உடல் எடையை குறைப்பது தொடர்பான ஆலோசனையை கேட்டார்.

எளிய அறுவை சிகிச்சை மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்தை பெறலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை தந்தனர். இதில் திருப்தி அடைந்த அமுதா அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர் வயிற்று வலி

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமுதாவுக்கு திடீரென்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.

இம்முறை ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சையால் வயிற்றில் உட்பகுதியில் சில இடங்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதாகவும், மீண்டும் அறுவை ஒரு சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அமுதாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிகிறது.

இதன் பின்னரும் அமுதாவுக்கு வயிற்று வலி நீங்கியபாடில்லை. தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அமுதா மீண்டும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அமுதா, மீண்டும் வயிற்றுவலி காரணமாக துடித்து போனார்.

10 மாதங்களாக...

இதனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அமுதாவை சேர்த்தனர். அங்கு அமுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அமுதாவின் உடலில் நுரையீரல் மற்றும் குடல் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அமுதா வீடு திரும்பினார்.

தொடர் அறுவை சிகிச்சையால் உடல் பாதிக்கப்பட்டு அமுதா கோமா நிலைக்கு சென்றார். இதனால் தனது வீட்டில் படுத்த படுக்கையாக அவர் கிடந்தார். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து, இப்படி படுத்த நிலையில் தான் சிகிச்சை பெறுவதை நினைத்து அமுதா தினமும் தன்னை நொந்துகொண்டு இருந்தார். நாளுக்கு நாள் அவர் தேகம் மெலிவடைந்தது. உருக்குலைந்த நிலையில் அமுதா கடந்த 10 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

புகார்

அமுதாவின் இந்த நிலைமைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று அவரது கணவர் கவுரிசங்கர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தவறான சிகிச்சை காரணமல்ல என்று விளக்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அமுதாவின் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் அமுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

அமுதாவின் உடல் நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பிணவறை முன் அமுதாவின் கணவர் கவுரிசங்கர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பிணவறை முன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் (தென்சென்னை) ஆதரவு அளித்தனர்.

போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை மறியலில் ஈடுபட விடாமல் தடுத்து நிறுத்தனர். இதனால் தொடர்ந்து பிணவறை முன் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

‘நியாயம் வேண்டும்’

இதுகுறித்து அமுதாவின் கணவர் கவுரிசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மனைவியின் சாவுக்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணமாகும். அதற்கான சாட்சியங்கள் என்னிடம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டும் போலீசார் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைது செய்யப்பட வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment