Friday 6 November 2015

இடி மின்னலுடன் பலத்தமழை சாலையோர வியாபாரிகள் அவதி













திருவாரூரில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

பலத்த மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மழை நின்றது. இந்நிலையில் அரபிக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

திருவாரூரில் நேற்று காலை மழை பெய்வதற்கான அறிகுறிகள் இன்றி வெயில் அடித்தது. 11 மணியவில் வானில் கருமேக கூட்டம் திரண்டு மழை பெய்வதற்கான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து திடீரென மழை பெய்தது. ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்று மீண்டும் வெயில் அடித்தது.

மதியம் 1 மணியளவில் மீண்டும் வெயில் மறைந்து, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் திருவாரூர் கடைவீதியில் தீபாவளி பண்டிகைக்கு துணி எடுக்க வந்த பொதுமக்கள் நனைந்தபடி சென்றனர். குறிப்பாக சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பலத்த காற்று வீச தொடங்கியது. காலை 11.40 மணிக்கு தொடங்கிய பலத்த மழை மதியம் 12.50 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. வாகனங்கள் பெரும் சிரமத்துடன் சென்று வந்தன. 

No comments:

Post a Comment