Tuesday 29 September 2015

மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாட்டுக்காக 20 ஆயிரம் பெண்களுக்கு ‘அம்மா கைபேசி’: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு









தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மகளிர் சுயஉதவி குழுக்கள்மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.
பயிற்றுநர்கள்தமிழ்நாட்டில் சுயஉதவி குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுயஉதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சுயஉதவி குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்கள் உள்ளனர்.
சுயஉதவி குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுயஉதவி குழுக்களை அமைப்பதற்கும், பயிற்றுவிப்பதற்கும் துணைபுரிந்து வருகின்றனர்.
அம்மா செல்போன் திட்டம்மகளிர் சுயஉதவி குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்துக்கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச்செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.
விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட செல்போன்கள் வழங்கப்படும். அம்மா செல்போன் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா செல்போன்களை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment