Friday 11 September 2015

சட்டப்பேரவை தேர்தல் 2016: வரைவு வாக்காளர் பட்டியல் செப். 15-இல் வெளியீடு

தமிழகத்தில் 5.68 கோடி வாக்காளர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 15-ஆம் தேதி வெளியிடப்படும் என, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்தார்.
 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 20, அக்டோபர் 4-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 மத்திய தேர்தல் ஆணையம் 01.01.2016-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, சட்டப்பேரவைத் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல்களில் திருத்தத்தை அறிவித்துள்ளது.
 அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட 28,850 வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
.
 வாக்காளர் பட்டியல் நகலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்குவர். 2015, ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5.62 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
 கடந்த 06.01.2015 முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரிய 9.25 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் 4.20 லட்சம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள், 5.05 லட்சம் வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள் ஆவர். இறப்பு, இடம்பெயர்வு, இருமுறை பதிவு போன்ற காரணங்களால் வரையறைகளுக்கு உள்பட்டு 3.15 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரும் 15-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் இப்போது 5.68 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
 கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்க கூட்டங்களில் செப்டம்பர் 16, 30 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய பாகங்கள் படிக்கப்பட்டு, பெயர்கள் சரிபார்க்கப்படும்.
 மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 20, அக்டோபர் 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடம் மாற்றத்துக்கான படிவங்கள் அங்கே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
 25 வயதுக்கு கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். elections.tn.gov.ineregistration என்ற இணையதள முகவரி மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று சந்தீப் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.
 அனைத்துக் கட்சிக் கூட்டம்: முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக சென்னையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை தேர்தல்  

No comments:

Post a Comment