Wednesday 16 September 2015

திருவாரூர் மாவட்டத்தில் 21,363 வாக்காளர்கள் நீக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களிடத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:
5.1.2015 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 4,78,401 ஆண், 4,74,944 பெண், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,53,352 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதன்பிறகு 6.1.2015 முதல் 14.9.2015 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் 6,632 ஆண், 8,683 பெண், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15,317 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, தொடர் திருத்தத்தில் 9,676 ஆண், 11,687 பெண் வாக்காளர் என மொத்தம் 21,363 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 4,75,357 ஆண், 4,71,940 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,47,306 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் விவரம்: 15.9.2015-ன்படி திருவாரூர் தொகுதியில் 1,23,401 ஆண், 1,24,157 பெண், 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,567 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,08,513 ஆண், 1,08,060 பெண் என மொத்தம் 2,16,573, மன்னார்குடி தொகுதியில் 1,17,145 ஆண், 1,18,487 பெண் என மொத்தம் 2,35,632, நன்னிலம் தொகுதியில் 1,26,298 ஆண், 1,21,236 பெண் என மொத்தம் 2,47,534 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 1,150 மொத்த வாக்குச்சாவடிகள் உள்ளன. வரைவு வாக்காளாó பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை முதலும், செப். 19, 30 தேதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், செவ்வாய்க்கிழமை முதல் (செப். 15) அக். 14-ம் தேதி வரை வாக்குச்சாவடிகளிலும், செப். 20, அக். 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்க்க மார்பளவு புகைப்படம், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான ஆதாரத்துடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நீக்கம், திருத்தம் செய்ய வேண்டுமெனில் உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment