உத்தரப் பிரதேத்தில் முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஆளும் சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சட்டப்பேரவை யின் நடப்பு கூட்டத்தொடரில் தீர் மானம் கொண்டுவந்து நிறைவேற்ற முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் களின் நிலை அறிய முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. இக்குழு, “பல்வேறு நிலைகளில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு 20 சதவீதம் வரை இட ஒதுக்கீடு அளிக்கலாம்” என பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் உ.பி.யில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில், இந்தப் பரிந்துரையை நிறைவேற்றுவோம் என முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்தது. எனினும் தேர்தலுக்குப் பின் முதல்வரான, முலாயமின் மகன் அகிலேஷ் சிங் இந்த வாக்குறுதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சச்சார் குழுவின் பரிந்துரையை காட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அகிலேஷ் முடிவு செய்துள்ளார். உ.பி. சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இதில் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆசம்கான் கொண்டுவர இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ’தி இந்து’விடம் சமாஜ்வாதி கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “உ.பி.யில் அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு விடும் டெண்டர்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது” என்றனர்.
சச்சார் குழுவின் பரிந்துரை களை அமல்படுத்தும் முயற்சியில் மாநில சிறுபான்மையினர் நலத்துறை இறங்கியுள்ளது. இதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத்துடன் முஸ்லிம் மாணவிகளுக்கு தனியான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மேல்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்பட உள்ளன. இதில் ஆசிரியர்களாக பெண்கள் மட்டும் நியமிக்கப்பட உள்ளனர்.
உ.பி.யில் முலாயம் சிங், முஸ்லிம்களின் ஆதரவு பெற்றவர் என்பதை குறிப்பிடும் வகையில் ‘முல்லா முலாயம்’ என அழைக்கப்படுகிறார். இடையில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக முன்னாள் தலைவர் கல்யாண்சிங்கை தமது கட்சியில் சேர்த்ததால் முஸ்லிம் வாக்குகளை இழந்தார். அடுத்து 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கல்யாண்சிங்கை கட்சியில் இருந்து நீக்கியதுடன், அவரை கட்சியில் சேர்த்ததற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் சச்சார் குழுவின் பரிந்துரைகளை உ.பி.யில் அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.
தற்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க சமாஜ்வாதி அரசு முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.