Saturday 10 May 2014

கையெழுத்து மறையும் காலம்

கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. குண்டு குண்டான கையெழுத்து, முத்து கோத்த மாதிரியான கையெழுத்து என்று பாராட்ட தேவை இல்லாமல் போய் விட்டது. நம் கையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் கணிணியின் பட்டன்களை தட்டினால் போதும், விதவிதமான எழுத்துருவங்களில் அழகான வரைவு தயார்.
டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டு, சம்பந்தப்பட்ட மருந்து கடைக்காரரைத் தவிர யாருக்கும் புரிவது இல்லை. டாக்டர்கள் இனிமேல் கொட்டை எழுத்தில் புரியும்படி எழுத வேண்டும் அல்லது கணிணி மூலம் தட்டச்சு செய்து தர வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவு போடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் இன்னும் சம்பிரதாய முறையில்தான் நடக்கிறது. விரைவில் அதையும் மெளசோடு காட்சி தரும் கணிணியையே விநாயகராகக் கருதி குழந்தைகளை பட்டன்களைத் தட்டச் செய்து ஆரம்பித்து வைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
முதல்முதலில் நமது கையெழுத்தை அரங்கேற்றிய சிலேட்டுப் பலகை, பலப்பம் ஆகியவற்றை மறக்க முடியுமா? சிலேட்டுப்பலகையில் டீச்சர் போடும் பத்துக்குப் பத்து மதிப்பெண்ணை அழிக்காமல் வீட்டுக்குக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டிய முதல் கையெழுத்திலிருந்து, திருத்தப்பட்டு வந்த விடைத்தாளில் பெரிய பெரிய சிவப்பு டிக்குடன் சுளை சுளையாய் மதிப்பெண்களை அள்ளிய கையெழுத்து வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
கையெழுத்தை வைத்து எதிர்காலத்தை கணித்துச்சொல்லும் சோதிடர்கள் இருக்கிறார்கள். கையெழுத்து கைரேகைபோல தனித்துவம் மிக்கது. மகாகவி பாரதியின் கையெழுத்து அழகாக இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக இருக்கும். எழுத்துகளில் புள்ளி வைக்கும் போது அந்த எழுத்துக்கே திலகம் வைத்ததுபோல் வட்டவடிவமாக வைத்துச்செல்வார்.
மகாத்மா காந்தியின் கையெழுத்து அழகாக இருக்காது ஆனால் சத்திய சோதனையில் உண்மைகளை மட்டுமே எழுதியதால் அந்தக் கையெழுத்தும் அழகாகி விடவில்லையா?
ஆதி மனிதன் குகைகளில் எழுதி வைத்த ஓவிய எழுத்துக்கள், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியால் எழுதி வைத்த இலக்கியங்கள், களிமண் தட்டுகளில் எழுதி நெருப்பில் சுட்டு பத்திரப்படுத்திய பழங்கால இனத்தோரின் பதிவுகள், கோவில் சுவர்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பொறித்து வைத்த மன்னர்களின் மெய்கீர்த்திகள் என எழுத்தை பத்திரப்படுத்த மனிதன் பட்ட பாடு கொஞ்சமல்ல.
இப்போதெல்லாம் காதலர்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி சாட்டிங் என்று நினைத்தமாத்திரத்தில் ஒருவரையொருவர் நெருங்கிவிட முடிகிறது. அந்தக்காலத்தில் கூட்டத்தில் உரசிச் செல்கையில் உள்ளங் கைகளின் ஊடாக காதல் கடிதங்கள் கைமாற்றப்பட்டன. அப்போது இருவர் கையிலும் பாய்ந்த மின்சாரத்தை மறக்க முடியுமா?
"எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற் செல்லும்' என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஒரு கவிதையில் எழுதி இருப்பார். விதியின் கையெழுத்தாய் வாழ்வை ரசித்தது கவிமணியின் உள்ளம். மகாத்மா காந்தி ஆப்ரகாம்லிங்கன் போன்ற உலகத்தலைவர்கள் கைப்பட எழுதிய கடிதங்கள் பல கோடி ரூபாயக்கு ஏலம் விடப்படுவதை பார்க்கிறோம்.
சீனாவிலிருந்து தமிழகத்திற்கு தமிழ் படிக்க வந்த வாங் பெள சூ என்ற ஆய்வாளரின் தமிழ் கையெழுத்து மிக அழகாக இருக்கும் அதற்கு அவர் சொன்ன விளக்கம், "எழுத்துகளும் ஒரு விதத்தில் ஓவியங்கள்தான். ஓவியங்களாக இருந்து எழுத்து வடிவம் பெற்றது தான் மொழி. சீனாவிலும் ஜப்பானிலும் "எழுதும் கலை' (இஅககஐஎதஅடஏவ) என்றே குறிப்பிடுவார்கள். அதுபோல் தமிழ் எழுத்துக்களையும் ஓவியங்களாகவே கருதி வரைகிறேன் அவ்வளவுதான்' என்றார்.
அவர் சொல்வதும் உண்மைதான். தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் மராட்டிய மன்னர் காலத்து மோடி கிரந்தங்கள், காவியங்கள், அரசாங்க ஆவணங்கள் ஆகியவை கடுக்காய் மசியில் எழுதப்பட்டு பலவர்ண பார்டர்களுடன் கண்ணைக் கவரும் ஓவியங்களாகவே காட்சி தருகின்றன.
பாரதியார், அரவிந்தர், ரமண மகரிஷி போன்றோரின் கையெழுத்துப் பிரதிகளை காணும் போது அவர்களின் அச்சிட்ட நூல்களில் கிடைக்கும், உணர்வைத் தாண்டிய இனம் புரியாத ஒரு பரவசத்தை அனுபவிக்க முடிகிறது. கையெழுத்து என்பது அழகற்றதாயினும் உயிரோட்டமானது; கணினி எழுத்து எவ்வளவு அழகாய் இருப்பினும் உயிரற்றது. முன்னது இயற்கை; பின்னது செயற்கை.
கிராமப் புறங்களில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை கையெழுத்து மறையும் நேரம் என்று சொல்வதுண்டு. கணிணியின் வரவால் நமது அன்றாட வாழ்க்கையிலிருந்தே கையெழுத்து மறையும் காலம் வந்து

No comments:

Post a Comment