Saturday 17 May 2014

சாட்டை வீசும் 'நோட்டா'!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், நல்லதொரு இடத்தைப் பிடித்து, நம்பிக்கையை விதைத்திருக்கிறது 'நோட்டா' (NOTA).


"ஜனநாயக நாட்டில் வாக்களிக்காமல் இருப்பது நியாயமல்லதான். சரி, நாங்கள் வாக்களிக்கத் தயார்... தேர்தலில் போட்டியிடுபவர்களில் யார் நல்லவர்... நியாயமாக ஆட்சி நடத்தப்போகிறவர் யார்... ஊழல் செய்யாமல் இருப்பவர் யார்... அடையாளம் காட்டுங்களேன்?!" என்று கேட்டால், பதில் தர ஆளிருப்பதில்லை. அல்லது தங்களுக்கு வேண்டியவர் என்பதற்காக பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக, ஆம்ஆத்மி என்று ஏதாவது ஒருவரை கைகாட்டுவார்கள்.

'வாக்களிக்கறது கடமை... இதுல யாருக்கு போடறதுனு கேக்கறது நல்லாவா இருக்கு. எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளினு சொல்ல முடியும். ஏதோ ஒரு கொள்ளியை எடுத்து மண்டையை சொறிஞ்சிகிட்டு போக வேண்டியதுதான்' என்று வக்கணையாக இதற்கு பதில் சொல்பவர்களும் உண்டு. அதாவது, ஏதாவது ஒரு திருடனுக்கு நீ வாக்களித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நீ இந்தியனே இல்லை எனபதுதான் இதற்கு உட்பொருள்!
ஏற்கெனவே '49 ஓ' என்று இருந்ததுதான், இப்போது 'நோட்டா'. கடந்த தேர்தல்களில் இந்த 49 ஓ என்பதை வாக்குச்சாவடியில் சொல்லி, உங்களுடைய வாக்கை யாருக்கும் பதிவு செய்ய விரும்பவில்லை என்பதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டியிருந்தது. இப்படி எழுதிக்கொடுக்க விரும்பாத பலர், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தனர். அதேபோல தேர்தல் பணியிலிருப்பவர்களுக்கும் இந்த 49 ஓ என்றால் என்ன என்பது தெரியாமல், ஏகப்பட்ட பிரச்னைகள் முளைத்தன.

இந்நிலையில்தான், இந்த ஆண்டு வாக்கு இயந்திரத்திலேயே வேட்பாளர்கள் வரிசையில் நோட்டாவையும் இணைத்து ஒரு பட்டன் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட, அதன்படியே நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் இது அமலாகிவிட்டது.

வேட்பாளர்களின் வரிசையில் கடைசி இடத்தில் 'நோட்டா'வுக்கு ஒரு பட்டன் கொடுக்கப்பட்டது (மேலே இருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்தான் நோட்டா-NOTA-None of the above). பெரிய அளவில் இதைப் பற்றிய பிரசாரம் இல்லாத நிலையில், இந்திய அளவில் சுமார் 60 லட்சம் வாக்குகளைப் பெற்று, ஒரு சில அரசியல் கட்சிகளைவிட, தெளிவானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது நோட்டா


அகில இந்திய அளவில், தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் 543 தொகுதிகளின் முடிவின்படி, 60,00,197 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ள. மொத்த வாக்குகளில் இது 1.1 சதவிகிதம். ஐக்கிய ஜனதாதளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளைவிட, நோட்டாவின் வாக்குகள் அதிகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 39 தொகுதிகளின் முடிவின்படி, 5 லட்சத்தி 82 ஆயிரத்தி 62 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகியுள்ளன. இது, மொத்த வாக்குகளில் 1.4 சதவிகிதம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளைக் காட்டிலும் அதிகம். நாடு முழுக்க நோட்டாவுக்கு பதிவாகியிருக்கும் வாக்குகளை ஒப்பிட்டால்... 9.71 சதவிகித வாக்குகள், தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன.

நீலகிரி தொகுதியில்தான் மிக அதிக அளவாக சுமார் 46 ஆயிரம் வாக்குகள் விழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, 3 சதவிகித வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. 22,268 வாக்குகள் இங்கே பதிவாகியுள்ளன. இந்த மாநிலத்தில் பா.ம.க பெற்ற வாக்குகளைவிட சற்றே குறைவாகவும்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கு வாக்குகளைவிட சற்று கூடுதலாகவும் வாக்குகளைப் பெற்றிருக்கிறது நோட்டா.

'எல்லாம் சரி, இப்படி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் பெரிதாக பலன் என்ன வந்துவிடப்போகிறது. யாருக்கும் இல்லை என்பதைவிட, யாருக்காவது ஒருவருக்கு போடலாமே' என்று ஒரு கேள்வி எழக்கூடும்.
அந்த யாரோ ஒருவர்... நல்லவராக இருந்தால் சரி. அப்படியில்லாமல், கோடிகளில் கொள்ளையடிக்கக் கூடிய ஊழல் பேர்வழியாகவோ... நாளைக்கு கொள்ளையராக மாறக்கூடியவராகவே... இருந்தால், அந்தக் கொள்ளைக்கு நீங்களும் துணை போனதாகத்தானே அர்த்தம்.

'போட்டியிலிருக்கும் வேட்பாளர்களைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தாலும், அதை வைத்து தேர்தல் முடிவை மாற்ற முடியாது. வேட்பாளர்களில் யாருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளதோ... அவர்தான் வெற்றிபெற்றவர் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, இந்த நோட்டா என்ன மாறுதலை ஏற்படுத்திவிடப் போகிறது?' என்றும் கேள்வி வரலாம்.

No comments:

Post a Comment