பிரபல முத்து வணிகர் புகாரி ஆலிம் தம்பதியினருக்கு 1927-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார் அப்துர் ரஹ்மான். ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மற்றும் ஹமீதியா பள்ளிகளில் படித்தவர். கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள்.
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் ஆவார். சீதக்காதி அறக்கட்டளை, அகில இந்திய இஸ்லாமிய நிறுவனம், கிரசன்ட் பள்ளிக்கூடம், கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி, சென்னை, மதுரை, நாகூர் ஆகிய இடங்களிலுள்ள கிரசன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் நிறுவனர்.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஈ.டி.ஏ.அஸ்கான் ஸ்டார் நிறுவனம், ஈடிஏ ஸ்டார் நிறுவனம், ஈ.சி.சி.ஐ., உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், யூசுப் சுலைகா மருத்துவமனை, கிரசன்ட் மருத்துவமனைகளையும் நிறுவியுள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜிவ் மற்றும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். துபாயில் ஒரு பகுதியிலுள்ள தெருவுக்கு அந்நாட்டு அரசு பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பெயரை சூட்டியுள்ளது. தனது திரைப்படம் ஒன்றில் அப்துர் ரஹ்மானை மனதில் வைத்து ஒரு பாடலை இடம் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.
இவர் சிறு வயதிலேயே இலங்கைக்கு சென்று வைர வியாபாரத்தில் ஈடுபட்டார். நாளடைவில் உலகிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரானார்.