Sunday 24 April 2016

பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் பேச்சு




தனியார் மற்றும் அரசு வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு தேர்தல் சிறப்பு பார்வையாளர் கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் முன்னிலை வகித்தார். மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க வேண்டும். டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகரித்தால், அதற்கு காரணம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 3 மாத விற்பனை விவரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடந்த மாதத்தை விட விற்பனை அதிகமாகாமல் நெறிப்படுத்த வேண்டும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன்கள் வழங்கப்படுகிறதா எனவும், தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் அன்றாட பண பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பறக்கும் படை குழுக்கள்

கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுக்கள் குறித்தும், இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்தும் மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் சி.வி.ஆனந்த் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு இதுவரை பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment