Monday 20 July 2015

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த நடவடிக்கை


திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நாகப்பட்டினம் எம்.பி. கே. கோபால்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை கட்டுமானப் பணி மற்றும் சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியது:
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டு முதல் கட்டமாக சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பெரிய பாலம் அமைக்கும் பணி தொடங்கும். மன்னார்குடி - சென்னை விரைவு ரயில் தஞ்சாவூர் வழியாக செல்கிறது. இதனால் இரண்டு ரயில் நிலையங்களில் என்ஜின் மாற்ற வேண்டியிருப்பதால் நேரம் மற்றும் செலவும் அதிகமாகிறது. எனவே அறிவித்தபடி திருவாரூர் வழியாக மன்னார்குடி - சென்னை ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை விரைவில் திருவாரூர் வழியாக இயக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
காலை 8 மணிக்கு பிறகு திருவாரூர் ரயில் நிலையம் வழியாக பிற்பகல் 2 மணி வரை ரயில்கள் இல்லை. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது துணை முதன்மை பொறியாளர் திருமலை உடனிருந்தார்.

No comments:

Post a Comment