Sunday 19 July 2015

நோன்பு பெருநாள் : திருவாரூர் மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை





திருவாரூர் மாவட்ட பகுதியில் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

திருவாரூர்

ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று திருவாரூர் கொடிக்கால்பாளையம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இமாம் அப்துல் நாசர் தொழுகையை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் உறவின்முறை ஜமாத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். இதேபோல திருவாரூர் விஜயபுரம் பள்ளிவாசல், அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்பட அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி குட்டியார் ஜும்மா பள்ளிவாசல், புதுத்தெரு பள்ளிவாசல், மெக்கா பள்ளிவாசல், ஆசாத்நகர் முகைதீன்பள்ளிவாசல், தர்கா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், அத்திக்கடை, காரியமங்கலம், நாகங்குடி, அரிச்சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தன. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை கூறி இனிப்பு வழங்கினர். அப்போது சிறுவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். 

No comments:

Post a Comment