ஓர் இந்தியர் தனது மொத்த செலவில் சராசரியாக 65%-ஐ உணவுக்காக செலவிடுவதாக புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
டயட் அட்லஸ் ஆஃப் இந்தியா (Diet Atlas of India) என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு தரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்களவைவிட அதிகளவில் உணவு தானியங்களுக்காக செலவு செய்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிராமவாசி, தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 41% உணவு தானியங்களுக்காகவும், 8% பால் பொருட்களுக்காகவும், 19% மற்றவைக்காகவும் செலவிடுகிறார்.
அதேவேளையில் நகர்ப்புறத்தில் வசிக்கும் நபர் ஒருவர், தனது உணவுக்கான தனது மொத்த செலவினத்தில் 25% உணவு தானியங்களுக்காகவும், 9% பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும், 26% மற்ற உணவு வகைகளுக்காகவும் செலவிடுகிறார்.
மேலும் அந்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் பாதிக்கும் அதிகமானோர் அசைவ உணவு உண்பவர்களாகவே உள்ளனர். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கின்றனர். அந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40%-க்கு குறைவானவர்களே அசைவ உணவு உண்கின்றனர் எனத் தெரிகிறது.