Monday 29 February 2016

திருவாரூரில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பொதுமக்கள் அவதி



திருவாரூரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டம்திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி நகரின் பல்வேறு இடங்களில் தரைக்கு அடியில் குழாய்கள் போடப்பட்டு, கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. குறிப்பாக தியாகராஜர் கோவில் எதிரே உள்ள சன்னதி தெரு, பனகல் சாலையில் உள்ள சிவம் நகர் ஆகிய இடங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
சிவம் நகரில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி, அப்பகுதி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சாலையின் நடுவே தேங்கி நிற்கும் கழிவு நீரால் சிவம் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
கீழகோபுர வாசல்இதேபோல நகரின் பிரதான பகுதியான தியாகராஜர் கோவில் கீழகோபுர வாசல் அருகில் உள்ள சன்னதி தெரு பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், நடந்து செல்பவர்கள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதிப்பட்டு வருகிறோம். கழிவு நீரில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, சுகாதார கேடு ஏற்பட்டிருக்கிறது. எனவே பாதாள சாக்கடை பழுதுகளை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment