Wednesday 10 February 2016

பாரபட்சக் கட்டண தடையை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் நடவடிக்கை: டிராய் எச்சரிக்கை

இணையதளம் பயன்படுத்துவதில் பாரபட்சமான கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடை செய்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறினால் அபராதத்தைத் தாண்டியும் கடும் நடவடிக்கை பாயும் என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. 

அதாவது ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகள் நிறுவனங்களின் மீறல்களை கட்டுப்படுத்தவில்லை எனில் டெலிகாம் சேவை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டிராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “அதாவது விதிமுறைகளை மீறி பாரபட்ச கட்டணம் வசூலித்து விட்டு அபராதம் கட்டிவிட்டு மீண்டும் தொடர்வது என்ற நடைமுறைக்கே இடமில்லை. 

விதியை மீறுதலுக்கு எதிரான விதிமுறைகளும் உள்ளன. அதாவது விதிமுறையை மீறினால் விதிமுறையின் பிற பிரிவுகள் உள்ளன. அதாவது பொதுவாக டிராய் விதிகளை மீறினால் அதற்கான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதாவது விதிமீறல் செய்யப்பட்டால், மொத்தமாக விதிமீறலுக்கான பிரிவுகள் உள்ளன. இதனால் அதன் படி நடவடிக்கை பாயும்” என்றார்.

இப்போதைக்கு பாரபட்ச கட்டணத்துக்கு எதிரான உத்தரவை மீறினால் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும், இதற்குப் பிறகும் விதிமீறினால் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தொலைத் தொடர்பு ஆணைய சேர்மன் மேலும் கூறும் போது, “அதாவது விதிமீறல் செய்து விட்டு அபராதம் கட்டிவிட்டு பிறகு தொடரலாம் என்பது முடியாது, கட்டணத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை டிராய்யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கட்டணங்கள் விதிக்கு புறம்பாக உள்ளதா என்று டிராய் ஆய்வு செய்யும். அதன் பிறகு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

அதாவது டெலிகாம் சேவை நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேறு வேறு காலக்கட்டங்களில் வேறு வேறு கட்டணங்களை வசூலிக்கலாம் ஆனால் இணையத்தை பயன்படுத்தும் போது அதன் உள்ளடக்கம் அடிப்படையில் அமைந்த பாரபட்சமாக கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. 

இதனை விளக்கிய ஆர்.எஸ்.சர்மா, “நான் கூறுவது துல்லியமான ஒப்பீடாக இருக்க முடியாது, இருந்தாலும் விளக்க முயற்சி செய்கிறேன், நீங்கள் ஹைவேஸில் செல்கிறீர்கள், அப்போது சுங்கச் சாவடிகள் அதற்கான கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டுமே தவிர, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டு அதற்காக கட்டணம் வசூலிக்க முடியாது. இதைத்தான் இணையத்தைப் பயன்படுத்தி அண்மிக்கப்படும் உள்ளடக்கங்களுக்காக வேறு வேறு கட்டணங்களை வசூலிக்க கூடாது என்கிறோம். 

இணையச் சமவாய்ப்பு என்பது எங்கள் புரிதலின் அடிப்படையில் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அவை வெறும் கட்டணம் தொடர்பானது மட்டுமல்ல. நாங்கள் இணையச் சமவாய்ப்பு என்பதை கட்டணத்தின் பார்வையிலிருந்து தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இது மட்டுமே டிராய்யின் கீழ் உள்ளது, பிற பிரிவுகள் டிராய்யின் கீழ் வராது” என்றார்.

பாரபட்ச கட்டணத்துக்கு டிராய் விதித்த தடையினால் ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைத்த பிரிபேஸிக்ஸ் திட்டம் மற்றும் ஏர்டெல் நிறுவனம் முன்வைத்த ஏர்டெல் ஜீரோ திட்டங்களுக்கு பலமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment