Wednesday 19 March 2014

கேள்விப்பட்டீர்களா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருந்தாலும்கூட, போகிற போக்கில் மன்மோகன் சிங் அரசு சில நல்ல முடிவுகளையும் எடுத்திருக்கிறது. கடைசி நேரத்தில், "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்று தேர்தலைக் குறிவைத்துச் செய்ததாலோ என்னவோ, மன்மோகன் அமைச்சரவையின் கடைசிநேர முடிவுகள் மக்களைச் சென்றடையவும் இல்லை; பெற வேண்டிய பாராட்டைப் பெறவும் இல்லை.


ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அமைத்த மொஹல்லா கமிட்டிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, மன்மோகன் சிங் அரசை யோசிக்க வைத்ததன் விளைவுதான் "லா பை கான்சென்ட்' என்கிற மக்கள் மன்றக் கலந்தாலோசனைத் திட்டம். மன்மோகன் சிங் அமைச்சரவை எடுத்திருக்கும் இந்த மக்கள் மன்றக் கலந்தாலோசனைத் திட்டம் என்பது ஒரு சில நாடுகளில் ஏற்கெனவே காணப்படும் வழிமுறைதான் என்றாலும், இந்த வழிமுறையை தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக நடத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது முதல்தான் இந்தியாவில் பரவலாக அறியப்பட்டது.


மத்திய அரசு இனிமேல் கொண்டுவர இருக்கும் மசோதாக்கள், அவையில் தாக்கல் செய்வதற்கு முன்னால் மக்கள் மன்றத்தில் பரவலாக விவாதத்திற்கு வைக்கப்பட வேண்டும் என்பதுதான் அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவு. எந்தவொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும், அந்த மசோதாவுடன் தொடர்புடைய அமைச்சகம் பரவலான விவாதத்திற்கு வழிகோலி சம்பந்தப்பட்ட, அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படும், பயனடையும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கேட்டறிந்த பிறகுதான் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எல்லா துறைகளும் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கலந்தாலோசனை, மசோதாக்களுக்கு மட்டுமானதாக இருக்காது. எந்தவொரு சட்டத்தை அமல்படுத்தும்போதும் அதற்காக உருவாக்கப்படும் சட்ட திட்டங்கள், விதிகளுக்கும் இது
பொருந்தும்.


சாதாரணமாக, மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னால், மக்களவை, மாநிலங்களவை, அந்த மசோதாவுடன் தொடர்புடைய நிலைக்குழு போன்றவை, மக்கள் மன்றத்திடம் கருத்துக் கோரி விளம்பரம் செய்வது வழக்கம். ஆனால், அப்படிக் கருத்துத் தெரிவிப்பவர்களின் ஆலோசனைகள் பெரும்பாலும் படிக்கப்படாமலே குப்பைத் தொட்டிகளுக்குச் செல்வதுதான் இதுவரை வழக்கமாக இருந்தது.


ஒவ்வோர் அமைச்சகத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் உள்ளன. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில், அந்தந்த அமைச்சகம் சார்ந்த எல்லா மசோதாக்களும் உறுப்பினர்களால் விவாதிக்கப்படுவதும், அந்தப் பிரச்னை தொடர்பான வல்லுநர்கள், பாதிக்கப்படுபவர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு அவர்களது கருத்து கேட்கப்படுவதும் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இவை அறைக்குள் நடக்கும் ஆலோசனைகளாக இருக்கின்றனவே தவிர, பரவலான விவாதமாக இல்லை.

நிலைக்குழுக்களில் விவாதிக்கப்படும் மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்வரைதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கான விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் உருவாக்குவது அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விடுகிறது. அந்தச் சட்டத்தால் பயனடையும் மற்றும் பாதிக்கப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை.

மக்கள் மன்றத்தின் வற்புறுத்தலின் பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம், பாலியல் தொந்தரவுத் தடுப்புச் சட்டம் போன்றவை அரசால் கொண்டுவரப்பட்டாலும், பல மசோதாக்கள் பரவலான விவாதம் இல்லாமலேதான் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற அவைகளும் அடிக்கடி அமளியில் மூழ்குவதால், பெரும்பாலான மசோதாக்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே நிறைவேற்றப்பட்ட மசோதாவின் ஷரத்துகள் தெரியுமா என்பது சந்தேகம். பொதுமக்களுக்கோ, அந்தச் சட்டம் அமலுக்கு வந்தபிறகுதான் அதுபற்றிய முழுமையான விவரம் தெரியும் என்கிற நிலைமை.


எந்த மசோதாவாக இருந்தாலும் பரவலான மக்கள் மன்ற விவாதத்திற்குப் பிறகுதான் நிலைக்குழுக்களால் பரிசீலனைக்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற மத்திய அரசின் முடிவு, மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதிகாரிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், மக்கள் மன்றம் வரவேற்கும். மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை விவாதக் கலாசாரம்தான். காலம் கடந்த கடைசிநேர முடிவாக இருந்தாலும், மன்மோகன் சிங் அமைச்சரவை எடுத்திருக்கும் உருப்படியான இந்த முடிவு வரவேற்புக்குரியது!

தினமணி 19/03/2014

No comments:

Post a Comment